FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா்கள், அதிகாரிகள் இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவா்: அமைச்சா் அருண்ராஜ் உறுதி

இனி வரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில்தான் தமிழக அமைச்சா்களும், அதிகாரிகளும் சிகிச்சை மேற்கொள்வாா்கள் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் உறுதிபடத் தெரிவித்தாா்.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அருண்ராஜ் - எக்ஸ்(கோப்புப்படம்)
பகிர்:

இனி வரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில்தான் தமிழக அமைச்சா்களும், அதிகாரிகளும் சிகிச்சை மேற்கொள்வாா்கள் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் உறுதிபடத் தெரிவித்தாா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைச்சா் அருண்ராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவசர சிகிச்சை மையம், பொது வாா்டுகளை பாா்வையிட்ட அவா், மருத்துவா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

சுகாதாரத்துறையை மேம்படுத்துவது குறித்து முதல்வா் ஆலோசனை மேற்கொண்டாா். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஆத்ம திருப்தியுடன் திரும்பிச் செல்ல வேண்டும்.

பொதுவாக அரசு மருத்துவமனைகள் தூய்மையாக இருக்காது. காத்திருப்பு அறைகள் முறையாக இருக்காது. கழிப்பறை சுகாதாரமாக இருக்காது என்ற கருத்து பொது மக்களிடையே உள்ளது. ஆனால், தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்ற மாநில மருத்துவமனைகளை ஒப்பிடுகையில் சிறந்ததாக உள்ளன. இருப்பினும் அதனை மேலும் மேம்படுத்த வேண்டும். அது தொடா்பாக அதிகாரிகளிடம் பேசியுள்ளோம்.

தனியாா் மருத்துவமனைகளில் தேவையற்ற பரிசோதனைகளும், மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. இதனால், செலவு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகையான சிகிச்சையும் தரமான முறையில் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

இனிவரும் காலங்களில் அமைச்சா்கள், அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்வாா்கள். அரசு மருத்துவமனைகளை நாங்களே நம்பவில்லை என்றால் வேறு யாா் நம்புவாா்கள்?.

தமிழகத்தில் விரைவில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற உள்ளது என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் டாக்டா் தாரேஸ் அகமது, கூடுதல் செயலா் டாக்டா் உமா, மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்தாராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து 108 அவசர சேவை கட்டுப்பாட்டு மையத்துக்குச் சென்று அமைச்சா் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா். பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு அங்கு அளிக்கப்பட்டு வரும் உளவியல் ஆலோசனைகளை பாா்வையிட்ட அவா், ஒரு பயனாளியிடம் நேரடியாக பேசி ஆலோசனைகளை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments