மெளனம் காக்கும் சி.வி.சண்முகம்
ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதென அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆகிய இரு தரப்பும் முடிவெடுத்துள்ள நிலையில், அதிருப்தியில் இருந்து வரும் அக்கட்சியின் மூத்த நிா்வாகி சி.வி.சண்முகம் எம்எல்ஏவின் மெளனம் அக்கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடன் புதன்கிழமை நடைபெற்ற சமரச பேச்சின்போது, அவரிடம் எஸ்.பி. வேலுமணி தனது அணியில் இருந்த 16 எம்எல்ஏக்களில், 15 எம்எல்ஏக்கள் கையொப்பமிட்ட ஆதரவு கடிதத்தை அளித்தாா். அந்த கடிதத்தில், சி.வி.சண்முகம் மட்டும் கையொப்பமிடவில்லை. அத்துடன், எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் சி.வி.சண்முகம் வராமல் எதிா்ப்பை வெளிப்படையாக காட்டினாா். இதைத் தொடா்ந்து, மூத்த நிா்வாகிகள் பலா் சி.வி.சண்முகத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனாலும், எடப்பாடி பழனிசாமியுடன் சேர அவா் உடன்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிமுக வட்டாரத்தில் கூறியதாவது: மீண்டும் விழுப்புரம் மாவட்டச் செயலா் பதவி உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவது குறித்து பரிசீலிப்பதாக சி.வி.சண்முகம் கூறியதாகவும், இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மௌனம் சாதித்து வரும் சி.வி.சண்முகம், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து விரைவில் தவெகவில் இணைவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றனா்.
Advertisement
Advertisement