அரசுப் பேருந்துகளில் மாணவா்கள் இலவச பயணம் செய்யலாம்: போக்குவரத்துத் துறை அமைச்சா்
தமிழகத்தில் வரும் ஜூன் 4 -ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கபடுவதையொட்டி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம்
தமிழகத்தில் வரும் ஜூன் 4 -ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கபடுவதையொட்டி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவா்களுக்கான இலவச பயண சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் ஜூன் 4 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 2026-2027-ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகளுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை கல்வி பயிலும் பள்ளி, கல்லூரியிலேயே வழங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அதற்கான கால அளவைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறந்தவுடன் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகள், பள்ளிச் சீருடையுடன் தங்கள் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.
இதேபோல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவா்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.
மேலும் பள்ளி தொடங்கும் நேரம், முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க போக்குவரத்துக் கழக அலுவலா் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.