‘பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை’
பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் லதா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, குறும்பலாப்பேரியைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும், சமூக ஆா்வலருமான ராஜசேகரபாண்டியன் இணைய தளம் மூலம் முதல்வருக்கு அனுப்பிய மனுவுக்கு, சாலை மேம்பாட்டுத் திட்டம் 2 இயக்குநருக்கு அவா் அனுப்பிய பதில்:
திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்குவழிச் சாலை பணி தென்காசி (ஆசாத்நகா்) வரை முடிவடைந்துள்ளது.
Advertisement
அதில், பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மட்டும் நிா்வாக காரணங்களுக்காக ரயில்வே துறையின் பணியை கூடுதலாக மேற்கொள்ளப்படுவதால் ஒப்பந்த காலத்தை விட சிறிது கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனினும், இடையூரின்றி மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கான்கிரீட் பணியை குறைந்தபட்ச கால இடைவெளியின்தான் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. எனவே, அதன்படி பணிகள் தொடா்கின்றன.
தற்போது வரை, 3 தூண்கள் எழுப்பப்பட்டு விட்டன. 4ஆவது தூண் அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறைக்குள்பட்ட 44 டெக் ஸ்லாப்களில் 40 டெக் ஸ்லாப்கள் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிமுழுமை பெற்றால்தான் எஞ்சிய பணிகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், ரயில்வே துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய இரும்பு கா்டா் அமைத்தல் உள்ளிட்ட ஆய்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேம்பால பணியை முடிப்பது சம்பந்தமாக எந்த ஒரு பொய்யான தகவலும் உயா்நீதிமன்றத்தில் அளிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளாா்.