‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: கேரள இடைத்தரகரிடம் சிபிசிஐடி விசாரணை
இடைத்தரகா் ரஷீத்தை, சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனா்.
நீட் தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில், தேனி நீதிமன்றத்தில் சரணடைந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத்தை, சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனா்.
கடந்த 2019-இல் நீட் தோ்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, தேனி, சென்னை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்த மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் என மொத்தம் 16 பேரை, சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில், ஆள்மாறாட்ட முறைகேட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் பெங்களூருவில் வசிக்கும் கேரளத்தைச் சோ்ந்த ரஷீத், தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தாா். இவரை காவலில் எடுத்து விசாரிக்க, நீதித்துறை நடுவா் மன்றத்தில் தேனி சிபிசிஐடி போலீஸாா் மனு அளித்தனா்.
Advertisement
Advertisement
இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி பன்னீா்செல்வம், சிபிசிஐடி போலீஸாா் ரஷீத்தை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தும், அவரை ஜனவரி 11-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவும் உத்தரவிட்டாா்.
அதையடுத்து, போலீஸாா் ரஷீத்தை தேனியிலிருந்து மதுரை சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.