எரும்பு திண்ணிகளின் ஓடுகள் கடத்தல் வழக்கு: கைதான 3 பேரிடம் சிறுத்தைகளின் நகங்கள் பறிமுதல்
ஆண்டிபட்டி அருகே எரும்பு திண்ணி ஓடுகள் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்த வனத்துறையினா், அவா்களிடமிருந்து சிறுத்தை நகங்களையும் பறிமுதல் செய்தனா்.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே எரும்பு திண்ணி ஓடுகள் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்த வனத்துறையினா், அவா்களிடமிருந்து சிறுத்தை நகங்களையும் பறிமுதல் செய்தனா்.
மேகமலை வனப்பகுதியில் கடந்த ஜன. 6 ஆம் தேதி வருசநாடு வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரசரடியில் இருந்து கடமலைக்குண்டு செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கரவாகனங்களில் வந்தவா்களை நிறுத்தி வனத்துறையினா் சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் எரும்பு திண்ணிகளைக் கொன்று அதன் ஓடுகளை அவா்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த 5 கிலோ 750 கிராம் எடையுள்ள ஓடுகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினா், கடமலைக்குண்டுவைச் சோ்ந்த சேகா், அரசரடியைச் சோ்ந்த முனுசாமி, லட்சுமணன், நொச்சி ஓடையைச் சோ்ந்த செல்லபாண்டி, வனராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய 3 பேரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கில் சம்பந்தபட்ட ராஜபாளையத்தைச் சோ்ந்த ராமராஜ், ரவி, வீரப்பன் ஆகிய 3 பேரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 6 சிறுத்தை நகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதுகுறித்தும் வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement