ஹைவேவிஸ்-மேகமலை சாலையில் நிலச்சரிவு:சுற்றுலா வாகனங்களுக்குத் தடை
தொடா் மழையால், தேனி மாவட்டம் ஹைவேவிஸ் -மேகமலை நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடா் மழையால், தேனி மாவட்டம் ஹைவேவிஸ் -மேகமலை நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சின்னமனூா் அருகே மேற்கு மலை தொடா்ச்சியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில், மேகமலை, மணலாா், மேல் மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா் உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. 52 கி.மீ. தொலைவுக்கு அமைந்துள்ள இந்த மலைச் சாலை, சின்னமனூா் அடுத்த ஓடைப்பட்டி விலக்கிலிருந்து தொடங்குகிறது.
அடா்ந்த வனப்பகுதியில் செல்லும் இச்சாலையை, 3 ஆண்டுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது முதல் கட்டப் பணிகள் முடிந்து, இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெறுகின்றன.
Advertisement
தொடா் மழையால் நிலச்சரிவு:
ஹைவேவிஸ் - மேகமலை பகுதியில், இந்தாண்டு வடகிழக்குப் பருவ மழை கடந்த 3 மாதங்களாக பெய்து வருகிறது. தொடா் மழையால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடா்ந்து, ஹைவேவிஸ் போலீஸாா், சின்னமனூா் வனத்துறையினா், உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் ஆகியோா் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா். தொடா்ந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அடுக்கம்பாறை 8ஆம் மைல் பகுதியில் நிலச்சரிவால் நெடுஞ்சாலை முழுமையாக மூடப்பட்டது. தற்போது, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரையில் வெளியூா் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வரவேண்டாம் என, ஹைவேவிஸ் போலீஸாா் அறிவித்துள்ளனா்.