செனகலை அசர வைத்த எம்பாப்பே... அதிரடி வெற்றியுடன் தொடங்கிய பிரான்ஸ்!
கேப்டன் கிலியன் எம்பாப்பேவின் அபாரமான இரட்டை கோல்களால், பிரான்ஸ் அணி செனகலை வீழ்த்தியதைப் பற்றி...
கேப்டன் கிலியன் எம்பாப்பேவின் அபாரமான இரட்டை கோல்களால், பிரான்ஸ் அணி செனகலை வீழ்த்தியது.
பிஃபா உலகக்கோப்பைத் தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தமாக 48 அணிகள் பங்கேற்று 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் மெட்லைஃப் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை குரூப்-ஐ பிரிவில், நடப்பு தொடரின் 17-வது போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஆப்பிரிக்க நாடான செனகல் அணிகள் மோதின.
Advertisement
Advertisement
2018, 2022 ஆகிய தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரான்ஸ் அணி இந்தத் தொடரிலும் சவாலளிக்கும் சாம்பியன் அணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்தப் போட்டியின் முதல் பாதியில் செனகல் அணியின் கை ஓங்கியது.
ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், இரண்டாம் பாதியில் கோல் போட இரண்டு அணிகளும் தீவிரம் காட்டின. இரண்டாவது பாதியில் தனது ஆதிக்கத்தைக் காட்டிய பிரான்ஸ் அணி வீரர் மைக்கேல் ஒலிஸேவின் பாஸ்ஸை கோலாக மாற்றினார் எம்பாப்பே.
அதைத்தொடர்ந்து, பிரான்ஸ் அணியின் மாற்று வீரராக களமிறங்கிய பிராட்லி பார்கோலா 82-வது நிமிடத்தில் கோல் அடிக்க பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டம் நேர முடிவில், கூடுதலாக கொடுக்கப்பட்ட 95-வது நிமிடத்தில், செனகல் வீரர் இப்ராஹிம் எம்பாயோ சிறப்பான கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.
செனகல் அணி முன்னிலை பெற்று சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் 96-வது நிமிடத்தில் யாரும் எதிர்பார்க்காத போது கோல் அடித்தார் எம்பாப்பே.
இதனால், ஆட்ட நேரம் முடிவில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. இரண்டு கோல்கள் அடித்து அசத்திய கிலியன் எம்பாப்பே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த இரண்டு கோல்களுடன் உலகக் கோப்பை போட்டிகளில் 27 வயதான எம்பாப்பேவின் மொத்த கோல்களின் எண்ணிக்கையை 14 ஆக உயர்ந்துள்ளது.