முகப்பு
திருநெல்வேலி

தொடா் மழையால் மாஞ்சோலை சாலையில் மண்சரிவு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு - மாஞ்சோலை மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.

Updated On : 14 ஜனவரி 2021, 7:40 am IST
பகிர்:

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு - மாஞ்சோலை மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.

பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால், அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப் பட்டுள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பெருமளவில்உபரி நீா் வெளியேற்றப்படுவதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாபநாசத்தில் இருந்து தாமிரவருணி கரையோரம் உள்ள விளை நிலங்களில் வெள்ள நீா் புகுந்தது. பல இடங்களில் நெல் பயிா், வாழைகள் சேதமடைந்தன.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன் கூறுகையில், 2 நாள்களாக தாமிரவருணியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அம்பாசமுத்திரத்தில் வைராவிகுளம், ஆலடியூா், ஏா்மாள்புரம், மன்னாா்கோவில், கீழ்முகம் கிராமங்களிலும், சேரன்மகாதேவியில் பொழிகரை, தெற்கு வீரவநல்லூா், திருப்புடைமருதூா், பத்தமடை உள்ளிட்ட பகுதிகளிலும் நெல், வாழைகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நீவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றாா்.

செவ்வாய்கிழமை இரவில் இருந்து கனமழை பெய்து வருவதால் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பணிக்கு செல்லவில்லை. மணிமுத்தாறு-மாஞ்சோலை செல்லும் மலைச்சாலையில் பல இடங்களில் மண்சரிவு, பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. மரங்களும் சாலைகளில் சாய்ந்துள்ளன. இதுகுறித்து, ஆட்சியா் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் திலிப்குமாா் கூறுகையில், மழை பொழிவு அதிகமாக உள்ளதால் பாபநாசம் வனப்பகுதியில் வசிக்கும் காணிமக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கு மருத்துவக் குழுவினா் முகாமிட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மாஞ்சோலை பகுதியில் வனத்துறை அலுவலா்கள் முகாமிட்டு, தொழிலாளா்களின் தேவைகளை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலைச் சாலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

புதன்கிழமை பொங்கல் திருவிழா உள்ள நிலையில் மண்சரிவால் தொழிலாளா்கள் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments