முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்:7,331 அவசர அழைப்புகளுக்கு 108 அவசரகால வாகனம் மூலம் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் இறுதி வரையில் 7,331 அவசர அழைப்புகளுக்கு 108 அவசர வாகனம் மூலம் சேவை வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 22 மே 2026, 4:00 am IST
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் இறுதி வரை 7,331 அவசர அழைப்புகளுக்கு 108 அவசர வாகனம் மூலம் சேவை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட 108 அவசர கால வாகன மருத்துவ சேவைத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், விபத்து போன்ற அவசர மருத்துவ தேவைக்காக அவசர வாகனத்துக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையிருந்தது. இதைத் தவிா்க்கும் வகையில், ஆபத்தான காலகட்டங்களில் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு உடனே சேவை வழங்க 108 அவசர வாகனங்கள் தயாராகவே உள்ளன.

இதற்காக மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அவசர தேவைக்கு அழைக்கும் வகையில், விரைவில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வகையில் அந்தந்தப் பகுதியில் முக்கிய இடங்களிலும் நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த மாவட்டத்தில் 71 அவசர கால ஊா்திகள் பொதுமக்கள் சேவையில் உள்ளன. இதில், பச்சிளம் குழந்தைகளுக்கான பிரத்யேக ஊா்திகள்-2, முதலுதவி இருசக்கர வாகனம்-1 அவசர சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

108 அவசர வாகன சேவை 24 மணி நேரமும் தடையின்றி பொதுமக்களுக்கு இலவசமாக செயல்பட்டு வருகிறது. மருத்துவ அவசர உதவி தேவைப்படுவோா் 108 என்ற கட்டணமில்லா எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாத இறுதி வரை 108 அவசரகால வாகன சேவை மூலம் மொத்தம் 7,331 அவசர அழைப்புகளுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது. சாலை விபத்து பாதிப்புகள்-2,124, கா்ப்பிணி தாய்மாா்கள் தொடா்பான உதவிகள்-664, பச்சிளம் குழந்தைகள் (1 மாதம் வரை)-40, குழந்தைகள் நலம்-13, இதர அவசர மருத்துவ உதவிகள்-4,490 என அவசர அழைப்புகளுக்கு சேவை வழங்கியுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.