25 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை
திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்தது. இதன்படி திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, திருப்பூா் மாநகராட்சி டி.எஸ்.கே. அரசு மகப்பேறு மருத்துவமனை, பொங்கலூா் ஆரம்ப சுகாதார நிலையம், சரண் தனியாா் மருத்துவமனை ஆகிய இடங்களில் 125 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
இதில், திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை டீன் வள்ளி சத்தியமூா்த்தி, சுகாதாரத் துறை மாவட்ட துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா், மருத்துவமனை கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பாா்வையிட்டனா். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவா்கள் முதலில் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்துகொண்டனா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதன் பின்னா் மருத்துவா்கள் அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்ததாக அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது, கண்காணிப்பு அறையில் 30 நிமிடம் இருப்பது போன்ற ஒத்திகை நடைபெற்றது.