கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
கச்சா எண்ணெய் இன்றைய விலை நிலவரம் பற்றி...
ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப் போவதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை காலை 7% அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இணைந்து பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது போர் தொடுத்ததன் விளைவாக, உலகின் கடல்வழி வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான நீர்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் எதிரொலியாக இந்தியா, சீனா உள்ளிட்ட அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் உடனடியாகவே பாதிப்பை எதிர்கொண்டன.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவளித்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனாலும், எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்தது.
Advertisement
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் முதல்முறையாக ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தம் செய்யப்படும் என்று கடந்த வாரம் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 15 சதவிகிதம் வரை சரிவைக் கண்டு 94.94 டாலராக வர்த்தகமானது.
இதனிடையே, இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போருக்கு முன்னதாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 62 முதல் 65 டாலர் வரை வர்த்தகமாகி வந்தது. போரால் ஏற்பட்ட தட்டுப்பாட்டால், பீப்பாய்க்கு 119 டாலர் என்ற உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.