சுதந்திர நாடுகளுக்கு நிபந்தனை விதிக்கும் நிலையில் அமெரிக்கா இல்லை: ஈரான்
அமெரிக்கா எந்த சுதந்திர நாட்டிற்கும் நிபந்தனை விதிக்கும் நிலையில் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா எந்த சுதந்திர நாட்டிற்கும் நிபந்தனை விதிக்கும் நிலையில் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், பல நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டை சந்தித்து வரும் நிலையில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முக்கிய மையப் பிரச்னையாக ஹோர்முஸ் நீரிணை மாறியது.
தற்போது போர்நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில் போரை முற்றிலுமாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவுபெறாமல் உள்ளன.
Advertisement
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தடையின்றி திறப்பது குறித்த முன்மொழிவை ஈரான் முன்வைத்த நிலையில் அதுபற்றி அமெரிக்கா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ”சுதந்திர நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை. அமெரிக்கா தனது சட்டவிரோத, பகுத்தறிவற்ற கோரிக்கைகளைக் கைவிட வேண்டும்” என ஈரானின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ரெசா தலாயி-நிக் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய ஈரான் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் தலாயி-நிக், ஈரான் தனது தற்காப்புக்கான இராணுவத் திறன்களை சுதந்திர நாடுகளுடனும், குறிப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா ஈரான் மீதான முற்றுகையை நீக்கினால், போரை நிறுத்தி ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாக ஈரான் குறிப்பிட்டதை டிரம்ப் நிர்வாகம் ஏற்பது சந்தேகமே எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் அது ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த விவாதங்களை ஒத்திவைக்கும். இதுபற்றிப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, "ஈரானுடன் எந்த ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், அவர்கள் அணு ஆயுதம் நோக்கி செல்வதைத் தடுப்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தேசியப் பாதுகாப்புக் குழு இந்த முன்மொழிவு பற்றி விவாதித்ததாகவும், இதுகுறித்து டிரம்ப் பின்னர் பேசுவார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.