தேர்தல் முடிந்ததும் மக்கள் பாக்கெட்டுகளைக் காலி செய்வதே பாஜகவின் வாடிக்கை! -பினராயி விஜயன்
உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஏன்? -பினராயி விஜயன்
திருவனந்தபுரம் : பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வாரங்களில் 4-வது முறையாக உயர்ந்துள்ள நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஏன்? என்று கேரளத்தின் முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
மேற்காசிய போரின் தாக்கம் எதிரொலியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சவால், உலகளாவிய கச்சா எண்ணெய் கடும் விலையேற்றம் மற்றும் பிற காரணிகளால் நாடெங்கிலும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின், 4 ஆண்டுகள் கழித்து பெட்ரோல், டீசல் விலையேற்றம் கடந்த மே 15-ஆம் தேதி அதிகாலையில் நிகழ்ந்தது. மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்டத் தோ்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ. 3 உயர்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த மே 19-ஆம் தேதியும் மே 23-ஆம் தேதியும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்குள், ரூ. 7-ஐ கடந்து விலையேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இனி வரும் நாள்களில் மேலும் விலை உயர்த்தப்படலாம் என்றே சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விலையேற்றம் குறித்து கவலை தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது :
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையேற்றத்தின் மூலம் மீண்டுமொருமுறை மக்களை ஏமாற்றுகிறது. கச்சா எண்ணெய் விலை உலகளவில் சரிவைக் கண்டபோதிலும், எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இது, சமானிய மக்களின் மீதான பகல்கொள்ளை! பாஜகவின் வழக்கமான யுக்தி தொடருகிறது : தேர்தல்களின்போது விலையைக் கட்டுக்குள் வைப்பதும், அதன்பின் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மக்களின் பாக்கெட்டுகளை காலி செய்யும் பாணி தொடருகிறது.
கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, வரி ரத்து கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டது. ஆனால், இப்போது கேரளத்தில் அவர்கள் அதிகாரத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தாங்கள் பிரசாரம் செய்த வரிகள் ரத்து மற்றும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தல் ஆகியவற்றை அவர்கள் கடைப்பிடிப்பார்களா என்பதைப் பார்க்க மக்கள் காத்திருக்கின்றனர் என்றார்.