எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!
எஸ்பிஐ கார்டு & பேமென்ட் சர்வீசஸ் லாபம் 14 சதவீதம் உயர்ந்து ரூ. 609 கோடியாக இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுதில்லி: மார்ச் 2026 உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், எஸ்பிஐ கார்டு & பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் லாபம் 14 சதவீதம் உயர்ந்து ரூ. 609 கோடியாக உள்ளது.
இதுவே கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 534 கோடி லாபம் ஈட்டியிருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டு இருந்த ரூ. 4,832 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 5,187 கோடியாக மேம்பட்டுள்ளது.
எனினும், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், வட்டி வருவாய் கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்த ரூ. 2,415 கோடியிலிருந்து குறைந்து ரூ. 2,382 கோடியாக உள்ளது. அதே வேளையில், இக்காலாண்டில், மொத்த வாராக்கடன், மார்ச் 31, 2025 நிலவரப்படி இருந்த 3.08 சதவீதத்திலிருந்து குறைந்து 2.41 சதவீதமாக உள்ளது.
Advertisement
இதற்கிடையில், நிகர வாராக்கடன்களும் 1.46 சதவீதத்திலிருந்து குறைந்து 1.04 சதவீதமாக இருந்தது. இதன் விளைவாக, சொத்து மதிப்பு இழப்பு மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள், கடந்த ஆண்டு இருந்த ரூ. 1,245 கோடியிலிருந்து குறைந்து ரூ. 1,097 கோடியாக உள்ளது.
2025-26 முழு நிதியாண்டைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டு இருந்த ரூ. 1,916 கோடியிலிருந்து 13 சதவீதம் உயர்ந்து ரூ. 2,167 கோடியாக அதிகரித்தது. மொத்த வருவாய் ரூ. 18,637 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 20,708 கோடியாக உள்ளது.
மார்ச் 31, 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் கடந்த ஆண்டு இருந்த ரூ. 65,546 கோடியிலிருந்து தற்போது ரூ. 66,328 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.