மாருதி சுசுகியின் 4வது காலாண்டு லாபம் 7% சரிவு!
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, 4வது காலாண்டில் ரூ. 3,591 கோடி நிகர லாபம் ஈட்டியது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4வது காலாண்டில் ரூ. 3,591 கோடி நிகர லாபம் ஈட்டியதாக இன்று தெரிவித்தது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ஈட்டிய ரூ. 3,857 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 7% சரிவாகும்.
2025-26 நிதியாண்டைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் நிகர லாபம் 1% உயர்ந்து ரூ. 14,454 கோடியாக இருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்தது.
தில்லியைத் தளமாகக் கொண்ட இந்நிறுவனம், செயல்பாட்டு வருவாய், 2025-26 நிதியாண்டின் 4வது காலாண்டில் 28% உயர்ந்து ரூ. 52,449 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ. 40,910 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
Advertisement
எனினும், மாருதி சுசுகியின் செயல்பாட்டுத் திறன் சீராகவே இருந்தது. அதன் செயல்பாட்டு லாபம் 27% உயர்ந்து ரூ. 6,157 கோடியை எட்டியபோதிலும், அதன் (EBITDA) லாப வரம்பு 10 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 11.74% ஆக சுருங்கியது.
2025-26 நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச விற்பனையை மாருதி சுசுகி பதிவு செய்தது. நிறுவனம் மொத்தம் 24,22,713 வாகனங்களை விற்பனை செய்ததாகத் தெரிவித்தது. இதில் உள்நாட்டு விற்பனை 19,74,939 வாகனங்களாகவும், ஏற்றுமதியானது 4,47,774 வாகனங்களாக அமைந்தது.
நிறுவனத்தின் 4வது காலாண்டில், வாகன விற்பனையானது 6,76,209 வாகனங்களாக இருந்ததது. இதுவே கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 11.8% அதிகமாகும். இதில் உள்நாட்டு விற்பனை 5,38,994 வாகனங்களாகவும், ஏற்றுமதி இதுவரை இல்லாத உச்சமாக 1,37,215 வாகனங்களாக பதிவானது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, பங்குக்கு ஒன்றுக்கு ரூ. 140 வீதம், இறுதி ஈவுத்தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
நிறுவனத்தின் வருவாய் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்கு விலை 2.74% வரை சரிந்து, ரூ. 12,860 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது.