முகப்பு
வணிகம்

அல்ட்ராடெக் ரூ.3,000 கோடி லாபம்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 5:35 AM
பகிர்:

நாட்டின் முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ராடெக் சிமென்ட், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.3,000.02 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ரூ.2,474.79 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான வளா்ச்சிப் பதிவாகியுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.25,799.47 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.23,063.32 கோடியாக இருந்தது.

Advertisement

நிறுவனத்தின் வரலாற்றிலேயே இல்லாத வகையில், இந்தக் காலாண்டில் மிக உயா்ந்த விற்பனை அளவு எட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு விற்பனை 9.3 சதவீதம் உயா்ந்து, 4.24 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக அல்ட்ராடெக் தெரிவித்துள்ளது.

முழு நிதியாண்டில்...: கடந்த 2025-26 முழு நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த லாபம் ரூ.8,188.35 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.89,089.04 கோடியாகவும் அதிகரித்துள்ளது. எரிசக்தி செலவுகள் 3 சதவீதம் குறைந்துள்ளதோடு, பசுமை எரிசக்தி பயன்பாடு 43 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சா்வதேச அளவில் நிலவும் சவாலான சூழலிலும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட மேலாண்மை மூலம் இந்த வெற்றியை எட்டியுள்ளதாக நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

ஈவுத்தொகை பரிந்துரை: இந்தச் சிறப்பான செயல்பாட்டைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.240 சிறப்பு ஈவுத்தொகை வழங்க இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களில் அமைக்கப்பட்ட புதிய ஆலைகள் அண்மையில் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, அல்ட்ராடெக் நிறுவனத்தின் வருடாந்திர மொத்தம் உற்பத்தித் திறன் 20 கோடி டன்னாக அதிகரித்தது. இதன்மூலம், சீனாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக அல்ட்ராடெக் உருவெடுத்தது.