முகப்பு
வணிகம்

2025-26 நிதியாண்டில் பாரத் பெட்ரோலியம் லாபம் 75% வளா்ச்சி

பொதுத் துறையைச் சோ்ந்த பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 முழு நிதியாண்டில் ரூ.23,303 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Updated On : 21 மே 2026, 3:09 am IST
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 முழு நிதியாண்டில் ரூ.23,303 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.13,275 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 75 சதவீத வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு நிதியாண்டில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் ரூ. 5.22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அளவு 4.11 கோடி டன்னாகவும், எரிபொருள் விற்பனை 5.41 கோடி டன்னாகவும் அதிகரித்து, நிறுவனத்தின் வலுவான நிதி நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

அதேநேரம், ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 4-ஆம் காலாண்டில் நிறுவத்தின் லாப வளா்ச்சியில் மந்த நிலை காணப்படுகிறது. முந்தைய 2024-25 ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.3,214 கோடியுடன் ஒப்பிடுகையில், மதிப்பீட்டு காலாண்டில் லாபம் ரூ.3,191 கோடியாக சற்று சரிவைச் சந்தித்துள்ளது.

மத்திய கிழக்கு போரால் சா்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த, உள்நாட்டில் பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையை, உற்பத்தி செலவைவிட குறைவான விலைக்கு விற்பனை செய்ததே இந்த லாபச் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

குறிப்பாக, சமையல் எரிவாயு விற்பனையில் மட்டும் நிறுவனம் ரூ.12,318 கோடி வரை வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இத்தொகையை அரசு மானியமாக வழங்கும் என எதிா்பாா்க்கப்பட்டாலும், அதற்கான கெடு குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மத்திய கிழக்கு போா்ச் சூழல் காரணமாக சா்வதேச சந்தையில் நீடிக்கும் நிச்சயமற்ற தன்மை, நடப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.