உச்சத்தில் மாருதி சுஸுகி பங்குகள்!
மாருதி சுஸுகி ரூ. 14,679.5 கோடி என்ற சாதனை அளவிலான ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியது.
புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, 2026 நிதியாண்டில் 24.22 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து, அதன் வரலாற்றிலேயே மிகச்சிறந்த வருடாந்திர விற்பனையாக சாதனை படைத்தது. இதனையடுத்து, மாருதி சுஸுகி ரூ. 14,679.5 கோடி என்ற சாதனை அளவிலான ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
மும்பை பங்குச் சந்தையில், நிறுவனத்தின் பங்கு 2.82 சதவீதம் உயர்ந்து ரூ. 13,255 ஆக வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், வர்த்தக நேரத்தின் போது, அதன் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்து ரூ. 13,545 ஐ எட்டியது.
தேசிய பங்குச் சந்தை - நிஃப்டி-யில், நிறுவனத்தின் பங்குகள் 2.83 சதவீதம் உயர்ந்து ரூ. 13,257 ஆக வர்த்தகமானது. இதனை தொடர்ந்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 11,422.25 கோடி அதிகரித்து ரூ. 4,16,740.61 கோடியாக உள்ளது.
Advertisement
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், வெளியிட்ட அறிக்கையில், ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பால் உந்தப்பட்டு, 2026 நிதியாண்டில் 24.22 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்ததாகவும், இதன் மூலம் கடந்த ஆண்டை விட 1.24 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ரூ. 14,679.5 கோடி என்ற சாதனை அளவிலான ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்ததாக தெரிவித்தது. அதே வேளையில், கடந்த ஆண்டு (2025) நிறுவனம் ரூ. 14,500.2 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியதாக, மாருதி சுஸுகி தெரிவித்தது.
2025 நிதியாண்டில் ரூ. 1,52,913 கோடியாக இருந்த செயல்பாட்டு வருவாய், 2026 நிதியாண்டில் ரூ. 1,83,316 கோடியாக உயர்ந்தது.
2025 நிதியாண்டில் 22,34,266 ஆக இருந்த மொத்த வாகன விற்பனை, 2026 நிதியாண்டில் 24,22,713 வாகனங்களாக விற்பனையாகி சாதனை படைத்தது. 2025 நிதியாண்டில் 19,01,681 ஆக இருந்த உள்நாட்டு விற்பனை, 2026 நிதியாண்டில் 19,74,939 ஆக உயர்ந்தன. அதே வேளையில், கடந்த ஆண்டு 3,32,585 ஆக இருந்த ஏற்றுமதி விற்பனையும் 4,47,774 ஆக உயர்ந்து சாதனை படைத்தது.
மாருதி சுஸுகி இந்தியாவின் பங்குகள் சுமார் 3 சதவீதம் உயர்ந்தன. பங்கு ஒன்றுக்கு ரூ. 140 என்ற சாதனை அளவிலான ஈவுத்தொகையை இயக்குநர்கள் குழு இந்த ஆண்டு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.