இரண்டு நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி... சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்வு! 23,200 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!
சென்செக்ஸ் 394.50 புள்ளிகள் உயர்ந்து 73,918.76 ஆகவும், நிஃப்டி 119.10 புள்ளிகள் உயர்ந்து 23,242.10 ஆக நிலைபெற்றது.
மும்பை: அரசியல் பதற்றங்கள் சற்று தணிந்ததாலும், கச்சா எண்ணெய் விலை மிதமாக இருந்ததாலும், இந்தியக் குறியீடுகள் இரண்டு நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்றைய வர்த்தகத்தில் (ஜூன் 9) உயர்வுடன் நிறைவடைந்தன.
சாதகமான உலகளாவிய பின்னணியில், பங்குச் சந்தை இன்று நேர்மறையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் நிலையற்ற தன்மையுடன் வர்த்தகமானது. இருப்பினும், இதனையடுத்து தொடர்ந்து வாங்குதல் போக்கு தொடர்ந்தததால், வர்த்தக முடிவில் இன்றைய உச்சத்தை தொட்டு நிறைவபெற்றது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 394.50 புள்ளிகள் உயர்ந்து 73,918.76 ஆகவும், நிஃப்டி 119.10 புள்ளிகள் உயர்ந்து 23,242.10 ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
30 பங்குகளை கொண்ட சென்செக்ஸில் டிரென்ட், ஐசிஐசிஐ வங்கி, இன்டர்குளோப் ஏவியேஷன், ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் என்டிபிசி, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், பவர் கிரிட் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் இன்டர்குளோப் ஏவியேஷன், ஜியோ ஃபைனான்சியல், ஐஷர் மோட்டார்ஸ், எஸ்பிஐ, அப்பல்லோ மருத்துவமனைகள் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஓஎன்ஜிசி, டைட்டன் கம்பெனி, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகம் தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தன. பொதுத்துறை வங்கி 3.6%, நிஃப்டி வங்கி 2%, தனியார் வங்கி குறியீடு 1.6% மற்றும் ரியல்டி குறியீடு 1.6% உயர்ந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.3 சதவீதம் உயர்ந்தத நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 1.7 சதவீதம் முன்னேறியது.
இதற்கிடையில், இன்று அந்நிய செலவானி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு அதன் முந்தைய நாள் முடிவில் இருந்து 36 காசுகள் உயர்ந்து, டாலர் ஒன்றுக்கு ரூ. 95.35 ஆக முடிவடைந்தது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை தணிந்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை நிலைபெற்றுள்ளன. இது எரிசக்தி சந்தைகளுக்கு ஓரளவு நிவாரணம் அளித்துள்ளது. இருப்பினும் உள்ளூரில், எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகின்றது.
டேட்டா பேட்டர்ன்ஸ், ஜே&கே வங்கி, ஆஸ்டர் டிஎம் ஹெல்த், சிர்மா எஸ்ஜிஎஸ், ஃபெடரல் வங்கி, சாய் லைஃப் சயின்சஸ் உள்ளிட்ட100-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயிடமிருந்து ரூ. 221.33 கோடி மதிப்பிலான இபிசி ஒப்பந்தத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்தன. மே மாதத்தில் சுங்கக் கட்டண வசூல் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 25 சதவீதம் அதிகரித்து ரூ. 843 கோடியை எட்டிய போதிலும், ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் லிமிடெட் பங்கின் விலை 1.3 சதவீதம் சரிந்தன. மறுபுறம் 'ஆஃபர் ஃபார் சேல்' முறை மூலம் 3 சதவீதம் வரையிலான பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 2 சதவீதம் சரிந்தன.
டெங்கு தடுப்பூசியின் உலகளாவிய பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலான 'டென்ஸ்டார்' திட்டத்தை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து பனேசியா பயோடெக் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 11 சதவீதம் உயர்ந்தன. பெரிய ஆர்டரைப் கைப்பற்றியதை அடுத்து விஏ டெக் வாபாக் நிறுவனத்தின் பங்கின் விலை 3 சதவீதம் அதிகரித்தது.
ரூ. 100 கோடி முதல் ரூ. 300 கோடி வரையிலான மதிப்பிலான ஆர்டரைப் பெற்றதைத் தொடர்ந்து ஜேஎன்கே இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 18 சதவீதம் உயர்ந்தன. வெளிநாட்டு தரகு நிறுவனங்கள் சாதகமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்கின் விலை சுமார் 4 சதவீதம் உயர்ந்தன. 'பிளாக் டீல்' மூலம் 4.4 சதவீத பங்குகள் கைமாறியதைத் தொடர்ந்து ப்ளூஸ்டோன் ஜூவல்லரி நிறுவனத்தின் பங்கு விலை 1.7 சதவீதம் சரிந்தன.
ஆசிய சந்தையில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கே 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்வுடன் நிறைவடைந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 5,555.67 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.15 சதவீதம் சரிந்து 93.17 அமெரிக்க டாலராக உள்ளது.