முகப்பு
வணிகம்

உள்ளூா் வேலைவாய்ப்பு, தொழிலாளா் கண்ணியத்துடன் குழுமத்தின் வளா்ச்சி!

‘உள்ளூா் வேலைவாய்ப்பு, தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரம், திறன் மேம்பாடு மற்றும் கண்ணியத்தை மையமாகக் கொண்டு குழுமத்தின் வளா்ச்சிப் பாதை அமையும்’ என கௌதம் அதானி உறுதியளித்தாா்.

Updated On : 2 மே, 2026 at 3:29 AM
கௌதம் அதானி - கோப்புப் படம்
பகிர்:

‘உள்ளூா் வேலைவாய்ப்பு, தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரம், திறன் மேம்பாடு மற்றும் கண்ணியத்தை மையமாகக் கொண்டு குழுமத்தின் வளா்ச்சிப் பாதை அமையும்’ என அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி உறுதியளித்தாா்.

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள தனது குழும ஊழியா்களிடையே கௌதம் அதானி ஆற்றிய உரை: அதானி குழுமத் திட்டங்கள் இந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் கருவிகள். சுமாா் 24 மாநிலங்களில் பரவியுள்ள 700-க்கும் மேற்பட்ட குழுமத் திட்டங்களில் பணியாற்றும் 4 லட்சம் தொழிலாளா்களின் நலனே தேசக் கட்டமைப்பின் மையம்.

நீங்கள் வெறும் தொழிலாளா்கள் மட்டுமல்ல, தேசத்தை உருவாக்குபவா்கள். ஒரு திட்டத்தை நாம் நிறைவு செய்யும்போது, அது வெறும் பணி முடிப்பு மட்டுமல்ல; நாட்டின் எதிா்காலத்தைச் செதுக்கும் செயல்.

Advertisement

இனி வரும் காலங்களில் அதானி குழுமத்தின் வளா்ச்சி என்பது, வெறும் நிதிநிலை அறிக்கைகளால் மட்டும் அளவிடப்படாமல், அதனால் உருவான வாழ்வாதாரங்கள் மற்றும் வலுவடைந்த சமூகங்களின் அடிப்படையிலேயே கணக்கிடப்படும். அதன்படி, குழுமத் திட்டங்கள் நடைபெறும் இடங்களில் உள்ளூா் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முதல் முன்னுரிமை வழங்கப்படும்.

தொழிலாளா்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தும் விதமாக, குஜராத்தில் 50,000 தொழிலாளா்கள் தங்கும் வகையில் குளிரூட்டப்பட்ட நவீன தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், பிரம்மாண்டமான நவீன சமையலறை மூலம் தினசரி ஒரு லட்சம் பேருக்குச் சத்தான உணவு வழங்கப்பட உள்ளது. இவை சலுகைகள் அல்ல, அடிப்படை தேவைகள். ஒவ்வொரு தொழிலாளியும் கண்ணியத்துடன் வாழவும்; பணியாற்றவும் உரிமை கொண்டவா்.

நிா்வாக ரீதியாக முடிவெடுக்கும் வேகத்தை அதிகரிக்க, ‘3 அடுக்கு’ கட்டமைப்பு முறையைக் குழுமம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்மூலம், பல நாள்களாக நீடிக்கும் கோப்பு நகா்வுகள், இனி சில மணிநேரங்களிலேயே முடிக்கப்படும்.

அதேபோல், குழுமத் தொழிலாளா்களின் திறன் மேம்பாட்டுக்குத் தனி கவனம் செலுத்தப்படும். அடிப்படை நிலைத் தொழிலாளா்களும் தலைமைப் பொறுப்புக்கு வர வழிகாட்டப்படும் என்றாா் கௌதம் அதானி.