சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.3,237! அப்போ ஒரு டீ விலை?
வணிக சிலிண்டர் விலை ரூ.3,237 ஆக உயர்த்தப்பட்டதால் டீ விலை என்னவாகும் என மக்கள் அச்சம்.
சென்னை: வணிக சிலிண்டர் விலை ரூ.993 அளவுக்கு உயர்த்தப்பட்டு ஒரே ஒரு சிலிண்டர ரூ.3,237-க்கு விற்பனையாகும் நிலையில், ஒரு டீ விலை எந்த அளவுக்கு உயரும் என்று மக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சென்னையில் எங்குப்பார்த்தாலும் அடுப்பை எரிக்க உதவும் விறகுக் கட்டைகளுடன் குட்டியானை வண்டிகள் செல்வதைக் காண முடிகிறது, இந்த நிலையில், மே 1ஆம் தேதி வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக ரூ. 993 உயர்ந்து, ரூ. 3,237-க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுளள்து.
ஏற்கனவே சாலையோர உணவகங்கள் பலவும் மூடப்பட்டுவிட்டன. இருக்கும் ஓரிரு உணவகங்களிலும் தோசை கிடையாது, இட்லி கிடையாது என கைவிரித்துவிட்டன. பல இளைஞர்கள் நம்பியிருக்கும் உணவகங்களில் சப்பாத்தி, இடியாப்பம், தோசை மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
Advertisement
தற்போது ஏற்றப்பட்டிருக்கும் சிலிண்டர் விலையும் நேரடியாக உணவகங்களில் விற்பனையாகும் உணவுப் பொருள்கள் மீதுதான் விழும். இரண்டு வேளை உணவருந்தியவர்கள் இனி ஒரு வேளைக்கே யோசிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஒரு டீயாவது குடித்து பசியாறியவர்கள் இனி ஒரு டீயா? அது எவ்வளவு என்று கேட்கும் நிலை உருவாகலாம் என சாதாரண தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
சென்னை மற்றும் சென்னையை சுற்றியிருக்கும் பல பகுதிகளில் உணவகங்கள் வெகு நாளாக பூட்டப்பட்டிருக்கும் நிலையில், இயங்கி வரும் ஓரிரு உணவகங்களும் இன்னும் கொஞ்ச நாளில் மூடப்படும் என்ற அச்ச நிலை உருவாகியிருக்கிறது. உணவுப் பொருள்களை தயாரிக்கும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் விலை அவ்வப்போது உயர்ந்து கண்ணைக் கட்டிவரும் நிலையில் தற்போது வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு உணவக தொழிலை பெருமளவில் ஆட்டங்கான வைக்கிறது. இதிலிருந்து உணவகங்கள் மீளுமா என்பது கேள்விக்குறியாகவும் மாறியிருக்கிறது.
கடைசியாக ஒரு தேநீரின் விலை என்னவாக இருக்கும் என்பது இன்று மாலை முதல் தெரிய வரும். ஏற்கனவே ரூ.20 முதல் ரூ.30 வரை தேநீர் விற்பனையாகிறது என்றால் அதில் 2 அல்லது 5 ரூபாய் ஏறுமா அல்லது ஒரேயடியாக ரூ.10 உயருமா என்பது தெரியவில்லை. எனினும் முக்கிய நகரப் பகுதிகளில் ரூ.40 வரை தேநீர் விலை உயரலாம், அல்லது விலையை ஏற்றினால் கடைப்பக்கமே வர மாட்டார்கள் என்று சில காலம் விலை ஏற்றத்தை கடைக்காரர்கள் தள்ளிப்போடலாம் என்று கூறப்படுகிறது.