ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
சென்செக்ஸ் 251.61 புள்ளிகள் சரிந்து 77,017.79 புள்ளிகளிலும், நிஃப்டி 86.50 புள்ளிகள் சரிந்து 24,032.80 புள்ளிகளாக நிலைபெற்றன.
மும்பை: இந்திய குறியீடுகள், நேற்றைய வர்த்தக அமர்வில் ஈட்டிய லாபத்தின் பெறும்பகுதியை, இன்றைய வர்த்தகத்தில் இழந்து, பலவீனமான நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. நிஃப்டி குறியீடு 24,000 புள்ளிகளுக்கு மேல் சென்று நிலைபெற்று வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை மந்தமான தொடக்கத்தைக் கண்ட பிறகு, மத்திய வேளையில் விற்பனை அழுத்தம் அதிகரித்தது. இது நிஃப்டி குறியீட்டை இன்றைய வர்த்தகத்தின் குறைந்தபட்ச அளவான 23,882.05 புள்ளிகள் வரை இழுத்துச் சென்றது. பிறகு, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால், வர்த்தக நேரம் முடிவடையும் வேளையில் குறியீடுகள் இழந்த மதிப்பில் ஒரு பகுதியை மீட்டெடுக்க உதவியது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 251.61 புள்ளிகள் சரிந்து 77,017.79 புள்ளிகளாகவும், நிஃப்டி 86.50 புள்ளிகள் சரிந்து 24,032.80 புள்ளிகளாக நிலைபெற்றன.
Advertisement
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடு, சற்றே உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ரூபாய் மதிப்பு பொறுத்தவரை, அதன் மதிப்பு தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக அமர்வாக சரிந்து வந்துள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்ட முந்தைய குறைந்தபட்ச அளவான 95.33ஐ கடந்து, இன்றைய வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு ரூ. 95.43 என்ற புதிய குறைந்தபட்ச நிலையை எட்டியது. இறுதியில், ரூபாய் மதிப்பு டாலர் ஒன்றுக்கு ரூ. 95.29 என்ற அளவில் நிலைபெற்றது.
சென்செக்ஸில் லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா மற்றும் மாறுதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன மறுபுறம் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா, டெக் மஹிந்திரா மற்றும் எட்டர்னல் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் மறுபுறம் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
துறைவாரியாக, ஆட்டோ, எஃப்எம்சிஜி, பவர், பார்மா மற்றும் டெலிகாம் குறியீடுகள் தலா சுமார் 0.5% உயர்ந்தன. அதே நேரத்தில், ரியல்டி குறியீடு 1.4%, நுகர்வோர் பொருட்கள் 1% மற்றும் தனியார் வங்கி குறியீடு 0.5% சரிந்தன.
4வது காலாண்டு முடிவை அடுத்து, மனாப்புரம் ஃபைனான்ஸ் லாபத்திற்குத் திரும்பியதால் அதன் பங்குகள் 1% உயர்ந்தன. ஒருங்கிணைந்த லாபம் 30% அதிகரித்ததை தொடர்ந்து ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் பங்குகள் 3.6% உயர்ந்தன. அதேசமயம், வலுவான வருவாய் இருந்தபோதிலும் ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் 5% சரிந்தன.
எச்எஃப்சிஎல், அதானி பவர், எம்க்யூர் பார்மசூட்டிகல்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, சிர்மா எஸ்ஜிஎஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ், அதானி போர்ட்ஸ், லாரஸ் லேப்ஸ், சாய் லைஃப் சயின்சஸ், ஏதர் எனர்ஜி உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் மீண்டும் எழுந்த அரசியல் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கச் சந்தைகள் கடும் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன. இதனால் 'டவ்' குறியீடு கணிசமான சரிவைக் கண்டது.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 2,835.62 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு சுமார் $113 என்ற அளவில் வர்த்தகமானது.