பிரதமர் விடுத்த வேண்டுகோள் எதிரொலி: எண்ணெய் விலை உயர்வு, சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி!
சென்செக்ஸ் 1,312.91 புள்ளிகள் சரிந்து 76,015.28 புள்ளிகளாகவும், நிஃப்டி 360.30 புள்ளிகள் சரிந்து 23,815.85 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை எட்டத் தவறியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தன. இதன் தாக்கத்தால், பங்குச் சந்தையில், இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 3வது நாளாக வீழ்ச்சியடைந்தன. இதில், முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 1,313 புள்ளிகள் சரிந்தது.
இன்றயை காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,370.79 புள்ளிகள் சரிந்து 75,957.40 புள்ளிகளைாக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,312.91 புள்ளிகள் சரிந்து 76,015.28 புள்ளிகளாகவும், நிஃப்டி 360.30 புள்ளிகள் சரிந்து 23,815.85 புள்ளிகளாக நிலைபெற்றது. வியாழக்கிழமை முதல் இன்று வரை நடைபெற்ற மூன்று நாள் வர்த்தக அமர்வுகளில், நிஃப்டி 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. அதேவேளையில், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1,950 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
சமீபத்திய அமைதி முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரித்தார். இதற்கிடையில், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை அடுத்து, அந்நியச் செலாவணி கையிருப்பு, பொருளாதாரத்தை வலுப்படுத்த எரிபொருளை விவேகத்துடன் பயன்படுத்துதல், தங்கம் வாங்குவதை ஒத்திவைத்தல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிவைத்தல் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்ததையடுத்து முதலீட்டாளர்களின் கவலை வெகுவாக அதிகரித்தது.
Advertisement
Advertisement
சென்செக்ஸில் 'டைட்டன்' நிறுவனம் அதிகபட்சமாக 7 சதவீதம் சரிந்து பெரும் இழப்பைச் சந்தித்தது. இதற்கிடையில் இன்டர்குளோப் ஏவியேஷன், பாரத ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், எட்டர்னல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான சந்தித்தன. மறுபுறம் சன் பார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
அரசியல் அழுத்தங்கள் மற்றும் பணவீக்கம் குறித்த அச்சங்கள் அதிகரித்ததன் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று பங்குகளை விற்கும் போக்கு தீவிரமடைந்தால், முக்கியச் சந்தைக் குறியீடுகள் 1.4 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவைச் சந்தித்தன.
கச்சா எண்ணெய் விலை குறித்த அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மையும், அரசியல் பதற்றம் அதிகரிக்கும் என்ற அச்சமும், முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள முதலீடுகளைத் தீவிரமாகக் கைவிடத் தூண்டியது. இதனால், சந்தை முடிவில் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.
ஆசிய சந்தைகளில், ஜப்பானின் முக்கிய குறியீடான நிக்கெய் 225 சரிவுடன் முடிவடைந்தன. அதே நேரத்தில் தென் கொரியாவின் முக்கிய குறியீடான கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்வுடன் நிலைபெற்றன.
ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமானது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க சந்தை உயர்வுடன் முடிவடைந்தன.
ஈரானின் சமாதானத் திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதிகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, முதலீட்டாளர்கள் அச்சத்தில் உறைந்தனர். இதன் காரணமாக, நிஃப்டி குறியீட்டு எண் 24,000 புள்ளிகளுக்குக் கீழே சென்றது.
தரவுகளின் அடிப்படையில், வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 4,110.60 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.23 சதவீதம் உயர்ந்து பேரலுக்கு ஒன்றுக்கு 103.5 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.
Stock markets fell for the third day on Monday, with the benchmark Sensex tumbling 1,313 points amid rising crude oil prices.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.