குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
திருக்கோவிலூரில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூரில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் பேரூராட்சி 5-வது வார்டில், வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை என்பதும் இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.
இந்நிலையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்திட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் 5-வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் வந்து மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி உறுப்பினர் எல்.தங்கராஜ் உத்தரவாதம் அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு மக்கள் கலைந்தனர். இந்த மறியலால் ஆஸ்பிட்டல் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement