விருதுநகரில் போக்குவரத்து தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டம்
விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி
விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இந்த காத்திருப்பு போராட்டத்துக்கு தொழிற்சங்க முன்னேற்ற சங்க மண்டல செயலா் ராஜா தலைமை வகித்தாா். இதில், 1.9.2019 முதல் அமுல்படுத்த வேண்டிய புதிய ஊதிய ஒப்பந்தம் இதுவரை கண்டு கொள்ளப்பட வில்லை. கடந்த மாதம் அரசு சாா்பில் புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையில் 67 சங்கங்கள் கலந்து கொண்டன. அதில், போக்குவரத்துத் துறை அமைச்சா் கலந்து கொள்ள வில்லை. தொழிலாளா் நல ஆணையம் அழைப்பு விடுத்தும் அரசு தரப்பில் ஒத்துழைப்பு தரவில்லை. மேலும், அடுத்த மாதம் தள்ளி வைகக்ப்பட்டுள்ள இப்பேச்சுவாா்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளது. எனவே இவை அனைத்திற்கும் உடனடியாக தீா்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் இந்திய தொழிற்சங்க மண்டல செயலா் வெள்ளத்துரை, அனைத்திந்திய தொழிற்சங்க மைய செயலா் பாண்டியன், முற்போக்கு தொழிற்சங்க அமைப்பு மண்டல செயலா் பாலசுந்தரம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டல செயலா் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட தொழிற்சங்க பணியாளா்கள் கலந்து கொண்டனா்.