முகப்பு
விருதுநகர்

திருச்சுழி தாலுகா கிராமங்களில் தொடர்மழை: நெற்பயிர்கள் சேதம்

திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட பல கிராமங்களிலும் அறுவடை நெருங்கியுள்ள இக்காலத்தில், பெய்த தொடர்மழைக்கு வெள்ளிக்கிழமை நெற்பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Updated On : 8 ஜனவரி 2021, 5:17 pm IST
மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.
பகிர்:

திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட பல கிராமங்களிலும் அறுவடை நெருங்கியுள்ள இக்காலத்தில், பெய்த தொடர்மழைக்கு வெள்ளிக்கிழமை நெற்பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இரண்டாம் கட்டமாகத் தீவிரமடைந்துள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட கிராமங்களில் பரவலாகத் தொடர்மழை பெய்துவருகிறது. இக்கிராமங்களில், ஏற்கெனவே கடந்த மாதங்களில் பலமுறை கனமழை பெய்தநிலையில், தற்போது மீண்டும் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

இதில், திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட பல கிராமங்களிலும், குறிப்பாக டி.வேப்பங்குளம், நாலூர், அல்லாளப்பேரி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 500க்கு மேற்பட்ட ஏக்கர் சாகுபடி நிலங்களில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கிவிட்டன. இதனால் அறுவடை நெருங்கிய இக்காலத்தில் நெற்பயிர்களைக் காத்திட மோட்டார் மூலம் தேங்கிய மழை நீரை வெளியேற்றி விவசாயிகள் பலகட்ட நடவடிக்கை எடுத்து வந்தனர். 

Advertisement

இருந்தும் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால், பயிர்கள், நெற்கதிர்கள் அழுகி, அறுவடை முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே அரசும் மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட விவசாயகளங்களை நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு பெற்றுத்தர விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.