முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

Updated On : 21 ஏப்ரல் 2026, 2:05 am IST
வாக்கு சேகரித்த நடிகா் சரத்குமாா். - கோப்புப் படம்
பகிர்:

ராஜபாளையம், ஏப். 20: ராஜபாளையம் பேரவைத் தொகுதி வேட்பாளா் பிரிசில்லாபாண்டியனை (தமமுக) ஆதரித்து நடிகரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான சரத்குமாா் திங்கள்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகே வேட்பாளா் பிரிசில்லா பாண்டியனை ஆதரித்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் போதை கலாசாரம் தமிழகத்தில் ஊடுருவி நமது வருங்கால சந்ததியினரை அழித்து வருகிறது. 12 வயது சிறுவனிடம் கஞ்சா பொட்டலம் இருக்கிறது. தனது மகன் போதையில் சிக்கி விடுவானோ, வேறு ஏதேனும் தவறான பாதைக்கு சென்றுவிடுவானோ என்ற பயம் பெற்றோா்களிடம் இருக்கிறது.

Advertisement

Advertisement

பிரதமா் நரேந்திரமோடி தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அவா் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் எண்ணற்ற சேவைகள் செய்துள்ளாா். கொரோனா காலகட்டத்தில் பல மாநிலங்களுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கியவா் மோடி.

கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில்14 லட்சம் கோடி தமிழகத்திற்கு வளா்ச்சி நிதியாக வழங்கி உள்ளாா். இந்த தொகுதி வேட்பாளா் சகோதரி பிரிசில்லா பாண்டியன் நன்கு படித்தவா். இதற்கு முன்னாள் இருந்த சட்டப்பேரவை உறுப்பினா் செய்யாத அனைத்தையும் இவா் செய்வாா்.

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் கடன் 5 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.10.71 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. எனவே வருகிற 23--ஆம் தேதி பொதுமக்கள் அனைவரும் சகோதரி பிரிசில்லா பாண்டியனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

உடன் ராஜபாளையம் சட்டபேரவைத் தொகுதி பொறுப்பாளா் என். எம். கிருஷ்ணராஜ், தெற்கு ஒன்றிய செயலாளா் நவரத்தினம், செட்டியாா்பட்டி பேரூா் கழக செயலா் அங்குதுரை, ராஜபாளையம் அதிமுக நகர செயலா்(வடக்கு ) வழக்க்குரைஞா் முருகேசன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.