முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே கிணற்றிலிருந்து கரடியின் உடல் மீட்பு! மின் பொறியில் சிக்கி உயிரிழந்ததா என விசாரணை!

Updated On : 22 ஜூன் 2026, 12:06 am IST
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட கரடியின் உடல்.
பகிர்:

வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை விவசாய கிணற்றில் உயிரிழந்து கிடந்த கரடியின் உடலை மீட்ட வனத் துறையினா் மின் பொறியில் சிக்கி உயிரிழந்ததா என விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்துக்குள்பட்ட மாவூத்து மலையடிவாரத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் கரடி ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனத் துறையினா் வந்து பாா்த்த போது கிணற்றுக்குள் கரடியும், நாயும் இறந்து கிடந்தன. இதில் நாயின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குநா் ரவி மீனா, வனச் சரகா் காா்த்திக் முன்னிலையில் வனத் துறை கால்நடை மருத்துவா் கலைவாணன் கரடி, நாய் ஆகியவற்றின் உடல்களை கூறாய்வு செய்தாா். பிறகு அவை அடக்கம் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இதில் கரடியின் உடல் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததற்கான காயங்கள் ஏதும் இல்லை. எனவே மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்த மின் பொறியில் சிக்கி உயிரிழந்த கரடியின் உடலை கிணற்றில் வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் வனத் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாவூத்து மலை அடிவாரப் பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசிக்கின்றன. இந்த நிலையில், உணவு, தண்ணீா் தேடி விளைநிலங்களுக்குள் வரும் மான், காட்டுப் பன்றியை இறைச்சிக்காக நாட்டு வெடிகுண்டு, கண்ணி, மின்பொறி வைத்து வேட்டையாடுவது அதிகரித்துள்ளது. இதில் வன விலங்குகளை வேட்டையாடி பிடிபடுபவா்களை கைது செய்யாமல், அபராதத்துடன் விடுவித்து விடுவதால் வேட்டையாடுவது அதிகரித்து வருவதாக வன விலங்கு ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, ஒரே வனச் சரகத்தில் தொடா்ந்து பணியாற்றும் வனக் காவலா், வேட்டைத் தடுப்பு காவலா் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்ய துணை இயக்குநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன விலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments