முகப்பு
வார இதழ்கள்

சினி மினி

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "குறையொன்றுமில்லை'. கதாநாயகனாக கீதன் அறிமுகமாகிறார்.

Updated On : 21 மார்ச், 2013 at 4:28 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "குறையொன்றுமில்லை'. கதாநாயகனாக கீதன் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஹரிதா நடிக்கிறார். சத்யமூர்த்தி, ஹிட்லர், கிருஷ்ணா உள்ளிட்ட புதுமுகங்கள் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். பிரகாஷ்ராஜிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் இப்படத்தை எழுதி, இயக்கி அறிமுகமாகிறார். படத்தின் கதைக் கரு மற்றும் சிறப்பம்சம் குறித்து இயக்குநரிடம் பேசும் போது, "" மனித மனங்கள் நூறு சதவீதம் உண்மையானது அல்ல. சிலர் குறைவாக தவறு செய்து எண்ணி எண்ணி வருந்துகிறார்கள். சிலர் அதிகப்படியான தவறுகளில் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் எல்லா மனிதர்களிடமும் தவறு செய்யும் மனப்பக்குவம் இருக்கிறது. அதில் நாளடைவில் சிலருக்கு மாற்றம் வரலாம். சிலர் குற்றவாளியாகி தண்டனை பெறலாம். அந்த மறுக்க முடியாத வாழ்வின் மாற்றங்களைத்தான் இப்படத்தில் திரைக்கதையாக்கி இருக்கிறேன். இந்த கதையின் இடையே விவசாயத் தொழிலில் எவ்வகையான மாற்றங்கள் நிகழ்ந்தால், இந்தியாவின் எதிர்காலம் சிறந்து விளங்கும் என்ற சமூக நோக்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். திருநெல்வேலி பக்கத்தில் உள்ள திருங்குறுங்குடி கிராமத்தில் பெருபான்மையான காட்சிகளை படமாக்கி இருக்கிறோம்'' என்றார்.

--------------------------------------------------------------

விஜய்யுடன் "துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்தார் காஜல் அகர்வால். இந்நிலையில் தற்போது நடித்து வரும் "தலைவா' படத்துக்குப் பின் விஜய், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் "ஜில்லா' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை நேசன் இயக்குகிறார். இப்படத்திலும் காஜல் அகர்வால் விஜய் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபகாலமாக முன்னணி ஹீரோக்கள், ஒரே ஹீரோயின் தொடர்ந்து தங்கள் படங்களில் நடிப்பதை விரும்புவதில்லை. ஒரே ஜோடியை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்தால் ரசிகர்கள் போர் ஆகி விடுவார்கள் என்பதால், முன்னணி ஹீரோக்கள் புதுமுக நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். இந்த பார்முலாவை விஜய் "வேலாயுதம்' படம் வரை பயன்படுத்தி வந்தார். அதை உடைக்கும் விதமாக காஜல் அகர்வாலை "ஜில்லா' படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு அவர்களுக்குள் இருக்கும் நெருங்கிய நட்புதான் காரணம் என்கிறார்கள். "துப்பாக்கி' படத்தில் நடித்த போது, காஜலின் துறு துறு நடவடிக்கைகள் விஜய்யை கவர்ந்து விட்டதாம். அத்துடன் விஜய் குடும்பத்துடன் காஜலுக்கு இருக்கும் நெருங்கிய நட்பும் காரணம்.

Advertisement


--------------------------------------------------------------

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் "இஷ்க் இன் பாரிஸ்' என்ற படத்தை பாலிவுட்டில் சொந்தமாக தயாரிக்க தொடங்கினார் ப்ரீத்தி ஜிந்தா. பிரேம் சோனி என்பவர் இதை இயக்கினார். இதில் பிரான்ஸ் நடிகை இஷபெல், அட்ஜானி மற்றும் ரெஹன் மாலிக் ஜோடியாக நடித்தனர். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் இயக்குநர் சோனி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் குணம் அடைந்தார். அதன் பிறகு பட வேலைகள் நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி படம் திரைக்கும் வரும் என ப்ரீத்தி ஜிந்தா அறிவித்ததுடன், அப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். பல முறை இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால் படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை. இப்படத்துக்கு ரூ.20 கோடி விலை நிர்ணயித்திருந்திருக்கிறாராம் ப்ரீத்தி. இந்த தொகையைக் கேட்டதும், விநியோகஸ்தர்கள் எஸ்கேப் ஆகி விடுகிறார்களாம். இதனால் ப்ரீத்தி பெரிய நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. படம் விற்பதை மூட்டை கட்டி வைத்த ப்ரீத்தி, சமீபத்தில் கும்பமேளாவிற்கு சென்று ஒரு வார காலம் விரதம் கடைப்பிடித்தார்.

--------------------------------------------------------------

கனவு சோலை மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "செம்புலம்'. புதுமுகங்கள் அமீத், லீமா ஜோடியாக நடிக்கின்றனர். நிழல்கள் ரவி, நெல்லை சிவா, உமாரவி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரமேற்று நடிக்கின்றனர். தயாள் ஒஷோ ஒளிப்பதிவில், ஷாந்தகுமார் என்பவர் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை யாழ்நிலவன் எழுத, புதுமுகம் சிவா இயக்குகிறார். ""உலகில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இங்குள்ள பழங்கால கோயில்கள், மண்டபங்கள், கற்சிற்பங்கள் வெளிநாட்டினரை அசத்துகிறது. அத்துடன் கலை நயம் மிக்க நமது கலாசார நடன சிற்பங்களை வெளிநாட்டினர் அதிசயமாகப் பார்க்கின்றனர். இப்படி வித்தியாசப்பட்டு நிற்கும் இந்தியாவின் சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க வந்த ஒருவன் செய்த தவறு, இந்திய சமூகத்தில் எவ்வளவு பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. இந்த திரைக்கதையின் தாக்கம் ஓர் உண்மை சம்பவத்தை தழுவியது. செவி வழியாக வந்த செய்தியில் சில கற்பனைகளைக் கலந்து இதை உருவாக்கி இருக்கிறேன்'' என்றார் இயக்குநர் சிவா.

--------------------------------------------------------------

கன்னடத்தில் உருவான "பிரசாத்' படத்துக்காக கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றிருக்கிறார் அர்ஜூன். நீண்ட இடைவெளிக்குப் பின் கன்னடத்தில் நடித்த இப்பட அனுபவம் குறித்தும், விருது குறித்தும் அர்ஜூனிடம் பேசிய போது, "" இந்த விருதை எதிர்பார்க்கவில்லை. கிடைத்ததில் மகிழ்ச்சி. சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது ஆச்சரியம் அளித்தது. விருது நோக்கத்தில் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. நல்ல விஷயங்களைச் சொல்லுவதுதான் நோக்கமாக இருந்தது. கமர்ஷியல் சினிமாக்களைத் தாண்டி, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் இப்போது தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இதற்கு மக்களின் ரசனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுதான் காரணம். அதற்கேற்றாற் போல் நானும் என் படங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். நல்ல படங்களுக்கு மட்டுமே நடிக்க கால்ஷீட் தருகிறேன். சின்ன சின்ன பட வாய்ப்புகளை ஏற்பதில்லை. அப்படி ஒப்புக் கொண்ட படம்தான் "பிரசாத்'. அதற்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. தற்போது "சி எம்' என்ற படத்தை இயக்கி நடிக்க இருக்கிறேன். இது அரசியல் படமல்ல'' என்றார் அர்ஜூன்.

--------------------------------------------------------------

நிலா எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "பிரம்மபுத்ரா'. முரளி, தினேஷ்பாபு, கங்கேஷ், அக்ஷதா, ரோஸி உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். உதயதாரா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். புதுமுகம் தாமஸ் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். படம் குறித்து பேசும் போது, ""15 ஆண்டுகளுக்கு முன் சென்னை, கோடம்பாக்கத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் தழுவல்தான் இந்தப் படம். இரண்டு சினிமா நண்பர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளே கதை. 5 வயதில் தொடங்கி 60 வயது வரை தொடர்ந்து வந்த ஆழமான நட்பைப் பற்றி பேசியிருக்கிறேன். கதை மூன்று காலக் கட்டங்களில் நட்பை சொல்லுவதால், மூன்று ஹீரோ, மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். 80-களுக்கு முற்பட்ட பகுதி, அதற்கு பிற்பட்ட காலம் என இரண்டு வகையான கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஏப்ரலில் படம் ரிலீசாகிறது'' என்றார் இயக்குநர் தாமஸ்.

--------------------------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.