கோலிவுட் ஸ்டூடியோ!
ஹிந்தியில் அறிமுகமாகியிருந்தாலும், தென்னிந்திய சினிமாவில்தான் தமன்னாவுக்கு அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தன.
அன்பை திருப்பிச் செலுத்தும் வழி - தமன்னா!
ஹிந்தியில் அறிமுகமாகியிருந்தாலும், தென்னிந்திய சினிமாவில்தான் தமன்னாவுக்கு அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தன. சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருப்பது பற்றி தில்லியில் ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார் தமன்னா.
அவர், 'என்னுடைய அனைத்துப் படங்களும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் புதிதாகத் தொடங்குவது போலவே உணர்கிறேன்.
Advertisement
குறிப்பாக, பெண் நடிகர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைப்பது அரிது.' என்றவர், தொடக்கத்தில் தென்னிந்திய சினிமாவில் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்து, பிறகு மற்ற சினிமாக்களிலும் பிரபலமானது பற்றி, 'பார்வையாளர்கள் தொடர்ந்து எனக்கு அன்பைத் தருகிறார்கள். தென்னிந்திய சினிமாக்கள் மூலம் மக்கள் என்னை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டனர்.அதே சமயம், இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து கிடைக்கும் இந்த அன்பு எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது.
மக்கள் எனக்குத் தொடர்ந்து கொடுத்து வரும் அன்பை, நான் அவர்களுக்கு எவ்விதத்தில் திரும்பச் செலுத்தலாம் என்பதற்கான வழிகளையும் இடைவிடாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.' எனப் பேசியிருக்கிறார்.
நயன்தாராவின் அசத்தும் லைன் அப்!
இந்திய சினிமாவில் 23-ஆவது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. 2003-இல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் 'மனசினக்கரே' மூலம் அறிமுகமானவர், 23 ஆண்டுகளுக்குப் பிறகும் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சல்மான்கான், பாலகிருஷ்ணா, மம்மூட்டி, மோகன்லால், யாஷ், நிவின்பாலி எனப் பலரின் படங்களில் பிசியாக இருக்கிறார். 'சினிமாதான் என்னுடைய வாழ்க்கையாக மாறிவிடும் என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு காட்சியும் இன்று என்னைச் செதுக்கி இருக்கிறது. சினிமாவுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்' என்று நெகிழ்ச்சியாகச் சொல்லும் நயன்தாராவின் லைன் அப் குறித்த அப்டேட் இது.
தமிழைத் தவிர இதர மொழிகளில் ஹீரோக்களுடன் நடித்து வரும் நயன்தாரா, தமிழில் ஹீரோயின் சென்ட்ரிக்கில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். 'மூக்குத்தி அம்மன்2', 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960', 'ராக்காயி', 'ஹாய்' இவை எல்லாமே ஹீரோயின் சென்ட்ரிக் தான்.
'மூக்கத்தி அம்மன் 2'வை சுந்தர்.சி இயக்கி முடித்துவிட்டார். ஃபேன்டஸி படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. 'ஹாய்' படத்தில் நயன்தாராவுடன் கவின், பாக்யராஜ், பிரபு, ராதிகா என சீனியர்கள் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. முதல் சிங்கிள் மே முதல் வாரத்தில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. 'யாரடி நீ மோகினி' போல இது ஒரு காதல் கதை என்கிறார்கள்.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவோடு நான்காவது முறையாக கைகோர்த்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் 111-ஆவது படத்தின் அறிவிப்பில் 'பேரரசுக்கு ராணி வந்துவிட்டார்' என அவர் கமிட் ஆனதை அறிவித்தனர்.
சென்ற நவம்பரில் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு முன் பாலகிருஷ்ணாவோடு 'ஸ்ரீராம ராஜ்ஜியம்', 'சிம்ஹா', 'ஜெய் சிம்ஹா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் ஷாரூக்கானின் 'ஜவான்' படத்துக்குப் பிறகு இப்போது சல்மான்கானோடு ஜோடி சேருகிறார். விஜய்யை வைத்து 'வாரிசு' படத்தை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்குகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது.
ஜனநாயகன் லீக் - சூர்யா கண்டனம்!
விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது.
இந்த நிலையில் அண்மையில், முதலில் 'ஜனநாயகன்' படத்தின் சில காட்சிகளும், தொடர்ந்து முழுப்படமும் இணையத்தில் லீக் ஆனது. இது ரசிகர்களையும், படக்குழுவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படியான பைரசியை ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
நடிகர் சிரஞ்சீவி, 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பது என்னை ஆழமாகக் கவலைப்படுத்துகிறது. சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக் கனவுகளால் உருவாக்கப்படுகிறது.
இத்தகைய சம்பவங்கள் தொழில்துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கின்றன. உழைப்பைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது நினைவூட்டுகிறது. சினிமாவை மதிக்கவும் பாதுகாக்கவும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். பைரசியை ஒழியுங்கள். சினிமாவைக் காப்பாற்றுங்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
'ஜனநாயகன்' படம் இணையத்தில் கசிந்திருப்பது பற்றி நடிகர் சூர்யா, 'ஒரு குழுவினரின் ஆர்வமும், உழைப்பும் இப்படி ஆக்கப்பட்டிருப்பது மனதை உலுக்கும் வகையிலும், நியாயமற்றதாகவும் இருக்கிறது.
நான் உங்களிடம் உண்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இந்தப் படத்தை இங்கே பார்க்காதீர்கள், பகிர்ந்துகொள்ளாதீர்கள் அல்லது விவாதிக்காதீர்கள். அவர்களின் உழைப்பை மதியுங்கள். நான் என் நண்பர்களுடன் நிற்கிறேன். இந்தச் செயலைக் கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாதது!' எனப் பதிவிட்டிருக்கிறார்.