ஏழு நகர வாழ்த்து!
நூறு ஆண்டுக்கு முன்னர் திருமணங்கள் பல நாள்கள் ஆரவார ஆர்ப்பரிப்புடன் நடைபெற்றுள்ளன.
'நூறு ஆண்டுக்கு முன்னர் திருமணங்கள் பல நாள்கள் ஆரவார ஆர்ப்பரிப்புடன் நடைபெற்றுள்ளன. திருமணங்களுக்கு சுந்தர சோழபுர நகரத்தார்களும், அருவியூர் வடக்கு வளவு நகரத்தார்களும் வந்திருக்கின்றனர். சிறப்புற இருந்த சமூகம் பண்பாட்டுச் சரிவில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறதோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. செல்லும் வழியைச் சீர் செய்ய இந்த ஓலைச்சுவடிகள் போன்ற பண்பாட்டுச் சான்றுகளை நாம் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது' என்கிறார் தொல்லியல் ஆர்வலரும், நூல் வெளியீட்டாளருமான குழிபிறை மா.இளங்கோ.
சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டி நகரத்தார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், ' ஏழு நகர வாழ்த்து பழங்கால நகரத்தார் திருமணம் அச்சுக்கு வந்த பழைமை மிகு ஓலைச்சுவடிகள்' எனும் நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த நூல் குறித்து குழிபிறை மா.இளங்கோ கூறியது:
'கல்வாசல் நாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் மருதங்குடியான கிங்கிணிக் கூறுடையார் குழிபிறை சொக்கப்பன் செட்டி பொய் சொல்லா மெய்யன் எழுதிய ஓலைச் சுவடிகளானது குழிபிறையைச் சேர்ந்த சரவணன் நாகப்பனிடம் இருந்தது.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை செயல்படுத்தும் பழைய ஓலைச்சுவடிகளை இருக்கும் இடத்திலே பாதுகாத்துத் தரும் திட்டத்தின்படி, என்னிடம் இருந்த ஓலைச்சுவடிகளையும், தெரிந்த நபர்களிடமிருந்த ஓலைச்சுவடிகளையும் பெற்று பாதுகாக்கும் பணியை மேற்கொண்டேன். அவை ஒரு நகரத்தார் இல்லத் திருமணம் குறித்தது.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் ஆயிரம் ஆண்டுகள் தொடர்பான சான்றுகள் கூடக் கிடைக்கின்றன. அச்சான்றுகளில் கிடைக்கும் செய்திகள் சில வரிகளே இருக்கும்.
என்னிடம் இருந்தவைகளில் நிறைவாக இருந்த ஓலையின் மூலம் இந்த நூலுக்கு 'ஏழு நகர வாழ்த்து' என்று சூட்டப் பெற்றிருப்பதை அறிந்தேன். நகரத்தார் இல்லங்களில் இருந்து திரட்டப்பட்ட சுவடிகளில் அதிகம் காணப்படுவது கடை கணக்குகள்தான். நூறு ஆண்டு காலப் பழமையானவை. அதற்கு முந்திய ஓலைகள் கிடைப்பது அரிது.
இசைக் குடிமானங்கள் பதிவு, திருமணச் செலவுகள், மொய்ப் பண ஏடுகள், கார்த்திகை புதுமை தொடர்பான ஓலைகள், அரிச்சுவடி, ராமாயணம், அறப்பணிகள் போன்ற எண்ணற்ற ஓலைச் சுவடிகள் நகரத்தார் வீடுகளில், கோயில்களில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
எனக்கு எண்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இசைக் குடிமானங்கள் கிடைத்தன. அவ்வரிகள் இன்று வரையில் மாறவில்லை. ஓலைகளில் எழுதப்பட்ட திருமணச் செலவுகள் தொடக்கம் முதல் முடிவு வரை இருந்தால், திருமணம் எத்தனை நாள்கள் நடந்தன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
1930, 1940-களில் 5 அல்லது 6 நாள்கள் திருமணம் நடைபெற்றிருக்கின்றன. குழிபிறை நகரத் தீர்மானம் 1937-இன்படி, 6 நாள்கள் திருமணம் நடந்திருக்கிறது. பொதுவாக, 16 நாள்கள்கூட திருமணங்கள் நடந்திருக்கின்றன என்ற செவிவழிச் செய்திகளும் உண்டு.
நமது ஊர்க் கோயில்கள் 150 ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டவை. புதிய கட்டுமானங்களுக்கு முன்னர் அந்த இடங்களில் சிறிய அளவில் திருமேனிகளை வைத்து வழிபட்டு இருக்கலாம். புதிய கோயில்களுக்குக் கண்டிப்பாக கணக்குகள் எழுதப்பட்டிருக்கும். ஆனால், எந்தக் கோயிலிலும் அந்தக் கணக்குகள் உள்ள ஓலைகள், பேரேடுகள் பாதுகாக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்த ஓலைச்சுவடிகளில் ரோமன் எழுத்துகள் ஏதுமில்லை. ஐரோப்பியர்கள், ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலை கொண்டவுடன் இங்குள்ள சமூகங்கள் கல்வி, போக்குவரத்து ஊர்திகள், புழங்கு பொருள்கள், உடைகள் செய்திப் பரிமாற்றங்கள், பொருளீட்டும் முறைகள் என எண்ணற்ற மாற்றங்களைக் கண்டன. ஐரோப்பியர்களின் தாக்கங்களைப் பதிவுகளாகப் பார்க்கலாம். ஆங்கிலேயர்களால் மாறிய காலங்களின் அடையாளங்கள் ஒன்றுகூட இந்தச் சுவடிகளில் காணப்படவில்லை.
1927-28 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பரப்பு இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியா முழுமைக்கும் விரிவடைந்திருந்தது. ஐரோப்பியர்
களின் அடையாளங்கள் நம் மீது படர்ந்திருந்தன. ஒருவரின் எழுத்தில் அக்காலத்திய எதிரொளிப்பு அவரை அறியாமலேயே இடம்பெறும். அப்படியான அடையாளங்கள் ஏதும் இந்தச் சுவடிகளில் இல்லை.
இன்றைய 9 நகரக் கோயில்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இந்த ஓலைகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். கோயில்கள், குளங்கள், நந்தவனங்களை அமைத்தோம் எனக் குறிப்பிடுகின்றன. எனவே, நகரக் கோயில்கள் கட்டப்பட்ட பொழுது எழுதப்பட்ட ஓலைகள் இவை.
திருமணங்களில் மேக வர்ண மெத்தை, துயிலாடை, பூசணம், பவளக்கால் வயிரப்பட்டு, மெய்ப்பாண மாதளம், காலில் நீலி, மாங்கல்யம் உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆரவார ஆர்ப்பரிப்புடன் திருமணங்கள் நடந்துள்ளன. குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. திருமணங்களுக்கு சுந்தர சோழபுர நகரத்தார்களும், அருவியூர் வடக்கு வளவு நகரத்தார்களும் வந்திருக்கின்றனர்.
அந்தக் காலத்தில் சிறப்புற இருந்த சமூகம் பண்பாட்டுச் சரிவில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறதோ என்ற எண்ணமும் அச்சமும் ஏற்படுகிறது. செல்லும் வழியைச் சீர் செய்ய இந்த ஓலைச்சுவடிகள் போன்ற பண்பாட்டுச் சான்றுகளை நாம் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்நூல் வெளிவர கல்வெட்டு ஆய்வாளர் மேலப்பனையூர் கரு.ராசேந்திரனின் பணியும் மிகப்பெரியது' என்கிறார் மா.இளங்கோ.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.