1985-ஆம் ஆண்டு பெங்களூரு ஆங்கில மொழிப் பயிற்சி மையத்தில் ஆறு மாத சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக கல்வித்துறை என்னை அனுப்பியது.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா என்று தென்னகப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆங்கிலப் பயிற்சி பெறுவதற்காக தலா 25 ஆசிரியர்களைத் தேர்வு செய்து அனுப்பும். நான்கு மாநிலங்களும் பயிற்சி மையத்தின் செலவை பகிர்ந்த கொள்ளும்.
பயிற்சியின் போது ஒரு நாள் பயிற்சி நிறுவனத்தில் இயக்குநர் (கேரளாவைச் சேர்ந்தவர்) மொழிப்பாடங்கள் நடத்தும் முறை பற்றி தினமணி செய்தித்தாளின் கட்டுரையை படித்துக் காட்டி விளக்கினார். அட அவ்வளவு விஷயங்கள் அந்தப் பத்திரிகையில் இருக்கிறதா? என்று வியந்ததோடு மட்டுமல்ல அன்றைக்கு மாலையே நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு அருகாமையிலுள்ள பேப்பர் கடையில் விசாரித்தேன். "ரெண்டு பேர் தான் பணம் கட்டி வாங்குகிறார்கள். வேணுன்னா பணம் ரூபாய் 50 முன் பணம் கட்டுங்க. நாளைக்கே வரவழைத்து தருகிறேன்' என்றார் கடைக்காரர். உடனே பணத்தைக் கட்டினேன்.
அநேகமாக அந்தப் பயிற்சியை சேர்ந்த 100 ஆசிரியர்களில், நான் மட்டும் தான் தினமணியை தினமும் வாசித்தேன். மீண்டும் தமிழ்நாட்டில் பதவி ஏற்றாலும் வெளியூர் செல்லும் நாட்களில் தினமணிக்காக அலைவேன். கிடைக்காத நாட்களில் ஏதோ ஒன்றை தவறவிட்டு விட்டதாகவே இன்றும் உணர்கிறேன். அந்தளவுக்கு நான் தீவிர வாசகனாகி விட்டேன்.
தினமணியின் கருத்துக்களம், வாசகர் கடிதம், தமிழ்மணி மற்றம் சிறுவர் மணியில் எனது கட்டுரைகள் பிரசுரம் ஆகியுள்ளன.
தற்போது எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு அப்போதைய கருத்துக்களம் பகுதிதான் ஊக்கமளித்து இன்றைக்கு 61 நூல்களை எழுதும் அளவுக்கு ஒரு எழுத்தாளனாக மாற்றியது தினமணியே!
அதாவது கருத்துகளைத் தெரிந்து கொள்வதில் பரிமாறிக்கொள்வதில். எனக்கும் தினமணிக்கும் உள்ள உறவு அலாதியானது.
கலாரசிகனும், ஆசிரியரும் ஒன்றுதான் என்பது பல ஆராய்ச்சிக்குப் பின்பே எனக்கு தெரியவந்தது. கலா ரசிகனின் மார்கழி மாத இசை விமர்சனங்களைப் படித்து பிரமிப்புற்றேன்.
தினமணி வெறும் அரசியல் செய்தியாக இல்லாமல் மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்டும் நாளிதழாக வருவது இது ஒன்று தான். இன்னும் பல்லாண்டுகள் பத்திரிகை தர்மத்தைக் கடைபிடித்து மென்மேலும் வளர்ச்சியை எட்ட வேண்டும்.
கட்டுரையாளர்: கடலூர் மாவட்ட முன்னாள் தொடக்கக் கல்வி தகவல் மற்றும் பயிற்சி அலுவலர்