தேநீர் கடை நடத்தும் மாரத்தான் வீராங்கனை..!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்த்திரேலியாவில் நடைபெறுவதால், அங்கே கலக்கிக் கொண்டிருக்கும் வீரர்கள் வீராங்கனைகள் குறித்த செய்திகள் பரவலாக வெளியிடப்படுகின்றன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்த்திரேலியாவில் நடைபெறுவதால், அங்கே கலக்கிக் கொண்டிருக்கும் வீரர்கள் வீராங்கனைகள் குறித்த செய்திகள் பரவலாக வெளியிடப்படுகின்றன.
விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் சர்வதேச அளவில் வாங்கினால் ஓரளவுக்குப் பெயரும், சன்மானமும் கிடைக்கும். அதுவே மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்றாலும் கொஞ்ச நாட்களுக்குள் மறக்கப்பட்டுவிடுகின்றனர்.
உதாரணம் 41 கி. மீ பெண்கள் மாரத்தான் போட்டியில் தமிழகத்தில் நான்கு முறை தங்கப் பதக்கம் வென்றவர் கலியமணி.
இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..?
கோயம்புத்தூரில் வசித்து வரும் கலியமணி குடும்ப வருமானத்திற்காக தேநீர் கடை வைத்து நடத்தி வருகிறார். கலியமணிக்கு நாற்பத்தைந்து வயதாகிறது.
தனது தேநீர் கடையில் ஏறக்குறைய முழு நேர ஊழியராக இருக்கும் கலிய மணி, பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். படிக்கும் போது, கபடி, தடகள போட்டிகளில் கலந்து கொள்வார். விளையாட்டில் இருந்த விருப்பம்தான் கலியமணியை மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு அழைத்து வந்தது. நான்கு முறை தமிழ்நாடு மாநில அளவில் தங்கப் பதக்கம் வாங்கினாலும், குடும்ப வருமானத்திற்கு அந்தத் தங்கப் பதக்கங்கள் உதவவில்லை.
திருமணம், குடும்ப சுமை, மூன்று குழந்தைகள் காரணமாக மாரத்தான் ஓட்டத்திலும் பங்கு பெற இயலவில்லை. இருந்தாலும், தினமும் குறைந்தது இருபது கி. மீ ஓட மறக்கவில்லை.
சரி தேநீர் கடை தொடங்கலாம் என்று கலியமணி முடிவு செய்தாலும் முதலீடு, கடை அட்வான்ஸ் , வாடகை ஒரு பிரச்னையாக இருந்தது. தங்கப் பதக்கங்களுடன் கடன் உதவி கேட்டு பல வங்கிகளில் ஏறி இறங்கினார். கடன் தர எந்த வங்கியும் முன்வரவில்லை.
"முன் வைத்த காலை பின் வைக்க விரும்பவில்லை. தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி தேநீர் கடையைத் தொடங்கினேன். மாரத்தான் ஓட்டத்திலும் கலந்து கொண்டேன் இப்படி போய்க் கொண்டிருக்கிறது' என்கிறார் கலியமணி. வங்கி உதவிகள் ஏதுமின்றி வாழ்ந்து காட்டுகிறார் கலியமணி.
- பனுஜா