கதை பாடல்!: தந்தை சொல்லே மந்திரம்!
செல்லன் என்னும் பெயருள்ள சிறுவன் ஒருவன் தன் தந்தைசொல்லும் சொல்லைக் கேளாமல்
செல்லன் என்னும் பெயருள்ள
சிறுவன் ஒருவன் தன் தந்தை
சொல்லும் சொல்லைக் கேளாமல்
சுற்றிச் சுற்றி வந்திட்டான்!
பள்ளிக்கூடம் சென்றாலும்
பாடம் தன்னைப் படிக்காமல்
உள்ளம் போன போக்கினிலே
ஊரைச் சுற்றி வந்திட்டான்!
""கல்வியைக் கற்றுக் கொள்ளாமல்
காட்டில் மேட்டில் அலைகின்றாய்!...
.... சொல்வதை நீயும் கேட்காமல்
சும்மா இருப்பதும் முறைதானோ?...
Advertisement
Advertisement
.... சின்னஞ்சிறிய வயதினிலே
சீராய்க் கல்வியைக் கற்றிட்டால்
என்றும் நன்மை வந்திடுமே
ஏற்றம் தருமே!...'' என்றிட்டார்!
தந்தை சொன்ன நற்சொல்லை
தனயன் செல்லன் கேட்காமல்
வந்தான் ஒரு நாள் வீதியிலே
"வா' என குழுவாய் சில மனிதர்
அழைத்தார் செல்லனை அன்பாக!
அருகில் வந்தான் செல்லனுமே!...
எழுத்தால் நிறைந்த கடிதத்தை
எடுத்துக் கொடுத்தார் செல்லனிடம்!
படித்துக் காட்டிட வேண்டுமென்று
பாங்காய் செல்லனைக் கேட்டார்கள்!
படித்துக் காட்டிடத் தெரியாமல்
பட்டான் நாணம் செல்லனுமே!
மனத்தால் "ஓ' என அழுதிட்டான்!
மாண்புடன் தந்தை சொன்னதையே
நினைத்துப் பார்த்தான் நெஞ்சினிலே
நேரே வீட்டுக்குச் சென்றிட்டான்!
""அப்பா நீங்கள் சொன்னதெல்லாம்
அலட்சியமாக நினைத்ததினால்
தவித்துப் போனேன் பலபேர் முன்
தகுதி இழந்தேன் படிப்பின்றி....
இனியும் தாமதம் செய்யாமல்
இன்றே பள்ளிக்குச் சென்றிடுவேன்!
முனைந்து கற்றுத் தேர்ந்திடுவேன்!
மூடத்தனங்களைப் போக்கிடுவேன்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.