முகப்பு
சிறுவர்மணி

குத்து விளக்கு தந்த ஞான ஒளி!

 குத்து விளக்கின் பாகங்கள் கூடி ஒன்றாய்ச் சேர்ந்திடவே

Updated On : 7 மார்ச் 2020, 3:31 pm IST
பகிர்:

 குத்து விளக்கின் பாகங்கள்
 கூடி ஒன்றாய்ச் சேர்ந்திடவே
 சத்தமாகப் பேசி அவை
 சண்டையிட்டுக் கொண்டனவே!
 
 கீழே உள்ள தட்டதுவும்
 கர்வத்தோடு சொல்லியது....
 ""தாழ்ந்து பணிந்து இவ்விளக்கைத்
 தாங்கிப் பிடிப்பது நான்தானே!....
 
 .... தாங்கிடும் நான்தான் இல்லையெனில்
 தடுமாறிக் கீழே விழுந்திடுவீர்!
 நீங்கள் நிலைத்திட இயலாது!
 நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!''
 
 தலையுடன் காலை இணைக்கின்ற
 தண்டுப் பகுதி சொல்லியது,....
 ""மேலே இருக்கும் பகுதியையும்,
 கீழே தட்டுப் பகுதியையும்.....
 
 இணைத்துக் கோர்ப்பது நான்தானே!
 இதையும் நீங்கள் உணர்வீரே!
 பிரிந்து கிடக்கும் உங்களை நான்
 பாசத்தோடு சேர்க்கின்றேன்!''
 
 குத்துவிளக்கின் மேற்பகுதி
 குதித்துச் சினமுடன் சொல்லியது!
 சத்தம் எதுவும் இல்லாமல்
 பொத்திக் கொண்டு கேளுங்கள்!
 
 "ஐந்து முகங்களும் எனக்குத்தான்!
 அழகிய திரியும் எனக்குத்தான்!
 எண்ணெய் குளமும் எனக்குத்தான்''
 என்று கர்வப் பட்டதுவே!
 
 உரசிய தீயைத் தாங்கிய குச்சி
 திரியில் ஏற்றி ஒளி தரவே
 தீபம் அருளைப் பொழிய மனிதர்
 அருகில் வந்து வணங்கினரே!
 
 ஏற்றிய தீபம் ஞானத்தை
 உடனே தந்தது விளக்கிற்கு!
 ஒற்றுமைதான் மிக பலமென்று
 உலகில் சுடரொளி பரவியது!
 கடலூர் நா.இராதாகிருட்டிணன்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments