அரிய சிற்பங்களைப் பாதுகாக்க நடவடிக்கை அவசியம்: சிங்கப்பூர் சிற்ப நிபுணர்
கோவை, ஜூன் 26: தமிழகக் கோயில்களில் உள்ள அரிய வகைச் சிற்பங்களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிற்பங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த விஜயகுமார் கூறினார். உலக
கோவை, ஜூன் 26: தமிழகக் கோயில்களில் உள்ள அரிய வகைச் சிற்பங்களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிற்பங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த விஜயகுமார் கூறினார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகிலேயே மிகவும் அரிய வகை சிற்பங்கள் தமிழகத்தில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால், அச் சிற்பங்களின் வரலாற்று முக்கியத்துவம் மக்களுக்குப் புரிவதில்லை.
Advertisement
பல்லவ மற்றும் சோழர் காலத்தில் வரைந்த சிறந்த ஓவியங்கள் சிறிய கோயில்களில் காணப்படுகின்றன. அவற்றின் முக்கியத்துவம் குறித்துத் தெரியாமல், அச் சுவர் மீதே வண்ணம் பூசுகின்றனர். இதனால், அச் சிற்பங்கள் கூறும் வரலாறு நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.
சிற்பங்களைப் புகைப்படம் எடுத்து ஆவணங்களாகப் பதிவு செய்ய வேண்டும். அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை ஆயிரக்கணக்கான சிற்பங்களின் புகைப்படங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். அவற்றை முறைப்படி ஆவணம் செய்தும் வருகிறேன். சிற்பங்கள் குறித்து தொகுக்கப்பட்ட தகவல்கள் www.poetryinstone.in இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இந்த இணையதளத்தின் பார்வையாளர்களாக இருப்பவர்கள்கூட அரிய வகை சிற்பங்களின் புகைப்படங்களை அளித்து வருகின்றனர்.
சிற்பங்கள் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அப் புத்தகங்களில் தொழில்நுட்ப ரீதியான சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்களுக்குப் புரியும் எளிய மொழியில் சிற்பங்கள் குறித்த ஆய்வுப் புத்தகங்கள் வர வேண்டும்.
இந்து அறநிலையத் துறைக்குக் கீழ் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. பெரும்பாலான கோயில்களில் அரிய வகை சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகின்றன. அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும் என்றார் அவர்.