முகப்பு
தமிழ்மணி

தெய்வத்தமிழ்!

பெருமை உடையவர்கள் ஆற்றக்கூடிய செயல் அருமை உடையதாகவே அமையும். அவ்வகையில் நம் மண்ணில் பல மகான்கள் வாழ்ந்து பற்பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள்.

Updated On : 16 பிப்ரவரி 2014, 2:27 am IST
பகிர்:

பெருமை உடையவர்கள் ஆற்றக்கூடிய செயல் அருமை உடையதாகவே அமையும். அவ்வகையில் நம் மண்ணில் பல மகான்கள் வாழ்ந்து பற்பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள்.

தருமபுர ஆதினத்தில் 14-ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கியவர் ஸ்ரீலஸ்ரீ கந்தப்ப தேசிக சுவாமிகள் ஆவார். அம்மகா சந்நிதானம், ஒரு சமயம் தென்னாட்டுத் திருத்தலப் பயணம் மேற்கொண்டு திருநெல்வேலிக்குச் சென்றார். அப்போது மழை பெய்யாது பொய்க்கவே, குடிமக்கள் மிகவும் வருந்தினர். அரசியல் வரி அலுவலர்கள் வரி வேண்டிக் குடிமக்களை ஒறுத்து வருத்தினர். வரி செலுத்த முடியாது துன்புற்ற குடிமக்கள், மாவட்டத் தண்டல் நாயகத்திடம் (கலெக்டர்) சென்று, "மழையின்மையால் விளைவுப் பயனில்லை. அதனால் வாடி வருந்தும் நாங்கள் வரி செலுத்துவது எவ்வாறு?''

என முறையிட்டனர்.

Advertisement

Advertisement

அத்தண்டல் நாயகத் துரை, ""என்னிடம் சொல்லிப் பயன் என்ன? உங்கள் ஊருக்கு வந்திருக்கும் பாதிரியாரிடம் (சந்நிதானம் - ஆச்சாரியார்) சென்று கூறினால் மழைபெய்யச் செய்துவிடுவாரே'' என்று ஏளனமாகக் கூறினார். குடிமக்களை அக்கொடி கூற்று, மழையின்மையால் பெறும் வருத்தத்தினும் மிக்கு வருத்தியது. ஆதலால் நிகழ்ந்தவற்றையெல்லாம் ஞானமூர்த்தியாகிய கந்தப்ப தேசிக சுவாமியிடம் கூறிக் குறை வேண்டினர். காட்சிக்கு எளியராகிய அவர், அதை செவிமடுத்ததும் புன்முறுவல் பூத்தார். தமிழ்ச் சொக்கநாதரை வழிபட்டுத் தியான சமாதியில் எழுந்தருளியிருந்தபோது, ஒரு திருப்பாடலைப் பாடியருளினார்.

""சைவ சமயஞ் சமயமெனில் அச்சமயத்

தெய்வம் பிறைசூடும் தெய்வமெனில் -

ஐவரைவென்று

ஆனந்த வெள்ளத் தழுந்துவதே முத்தியெனில்

வானங்காள் பெய்க மழை''

இப்பாடலால் "தெய்வத்தமிழ்' என்பதை உணர்ந்த மேகங்கள் ஒன்றுகூடிக் கருக்கொண்டு மழை பொழிய, ஏரி, குளம், ஆறு முதலியவற்றில் நீர் நிரம்பி வழிந்தது. ஆற்றிலோ வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எவ்வுயிரும் இன்பத்தில் மூழ்கின. எள்ளி நகையாடிய துரை மகன், ஞானாசிரியப் பெருமானது அருள் வலிமையை அறிந்து போற்றினார். தான் ஏளனம் செய்தமைக்கு வருந்திச் சொக்கநாதப் பெருமானுக்குச் சிறப்பொடு அபிடேக ஆராதனைகள் நடத்தும்படி நூறு வராகன்

பொன்னைக் காணிக்கையாக வைத்து வணங்கினார். இந்த அற்புத வரலாற்றுத் தகவல் "தருமை குருமணிகளின் அருள் வரலாறு' என்ற நூலில் காணப்படுகிறது.

படம் : அன்புமணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.