முகப்பு
தமிழ்மணி

சுவரோவியங்களில் செங்கோல் விழா!

கோயில் மாநகர், திருவிழா நகர் என்று அழைக்கப்பெறும் மதுரை சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா பன்னிரண்டு நாளும் ஆவணி மூலப் பெருவிழா (திருவிளையாடல் திருவிழா) தெப்பத் திருவிழா ஆகிய விழாக்கள் சிறப்புமிக்கவை.

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:48 AM
பகிர்:

கோயில் மாநகர், திருவிழா நகர் என்று அழைக்கப்பெறும் மதுரை சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா பன்னிரண்டு நாளும் ஆவணி மூலப் பெருவிழா (திருவிளையாடல் திருவிழா) தெப்பத் திருவிழா ஆகிய விழாக்கள் சிறப்புமிக்கவை.

மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறும் சித்திரை விழாவின் எட்டாம் நாள் விழா மீனாட்சியம்மைக்கு முடிசூட்டு விழாவும் செங்கோல் வாங்கும் நிகழ்ச்சியும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்விழா திருமலை நாயக்கர் காலத்தில் சிறப்புற்று விளங்கியுள்ளது. இவ்வழக்கம் இராணி மங்கம்மாள் காலத்திலும் தொடர்ந்
துள்ளது.
மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் பொற்றாமரை குளத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டப மேல் விதானத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சியம்மை திருமணக் காட்சி, மீனாட்சியம்மை எட்டுத்திசை காவலருடன் போரிடும் காட்சி, மீனாட்சியம்மையிடமிருந்து செங்கோல் பெறும் நிகழ்வு, சிவபெருமானின் திருவுருவங்கள் ஆகிய ஓவியங்கள் நாயக்கர் காலத்தில் தீட்டப்பட்டுள்ளன.
மீனாட்சியம்மையிடமிருந்து செங்கோல் பெறும் நிகழ்வு அரியணையில் அமர்ந்த நிலையில் மீனாட்சியம்மை செங்கோல் வழங்க, தலைமை பட்டர் வாங்கும் காட்சியும் (படம்) அருகில் இராணி மங்கம்மாள், பட்டர்மார் இருவர் நின்றகோலத்தில் வணங்கிய நிலையிலும், சாமரம் வீசும் பெண், மலர் ஏந்தி வழிபடும் பெண்கள் ஆகியோரும் காட்டப்பட்டுள்ளனர். ஓவியத்தின் மேற்பகுதியில் "மீனாட்சியம்மன் செங்கோல் கொடுத்தது மங்கம்மாள்' என்னும் குறிப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இவ்வோவியம் பண்டைய தமிழர் ஆட்சி மரபு வழக்கத்தை உணர்த்துகிறது.
சேதுபதிகளின் சித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இராமநாதபுரம் இராமலிங்க விலாச உட்புறத்தில் சேதுபதி காலத்தில் இராமாயணம், பாகவதம், திருமால் அவதாரங்கள், தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் முத்துவிஜய ரகுநாத சேதுபதிக்கும் இடையே நடைபெற்ற போர்க் காட்சிகள், சேதுபதி மன்னரின் பள்ளியறைக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இராமர் பீட மண்டப மேல் வளைவுகளில் சேதுபதி மன்னர் உருவங்கள் பல்வேறு நிலைகளில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இதில் இரகுநாத சேதுபதி தமது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மையிடமிருந்து செங்கோல் பெறும் நிகழ்வும் காணப்படுகிறது.
இவ்வோவியத்தில் இராஜராஜேஸ்வரி அம்மன் அமர்ந்த கோலத்திலிருந்து செங்கோலை முத்து
விஜய ரகுநாத சேதுபதிக்கு வழங்க, அவர் இரு கையை நீட்டிப் பெறுகிறார். அருகில் அரசியும் இளவரசரும் சாமரம் வீசும் பெண்டீரும் காட்டப்பட்டுள்ளனர். மன்னரும் இளவரசரும் மொகலாயர் பாணியில் ஆடை அணிகலன்களை அணிந்துள்ளனர். கி.பி.17-18ஆம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்பையும் வழிபாட்டுமுறையையும் விளக்கும் இவ்வோவியங்களைச் சிறந்தமுறையில் பாதுகாப்பதும் அவற்றை நவீன முறையில் ஆவணப்படுத்தி, மக்களுக்கு வழங்குவதும் ஆட்சியாளர்களின் கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments