பெண் பார்க்கச் செல்லும் மரபு
திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற்காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.
திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற்காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர். வந்தோர் அனைவரும், வீட்டினுள் முன்பகுதியில் அமர்ந்துள்ளனர்.
வீட்டின் உட்பகுதியில் பெண் (தலைவி) இருக்கிறாள். அவளது தோழியோ, பெண்கேட்க வந்துள்ளோர், பெண் வீட்டாரிடம் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதையும், பிறவற்றையும் வீட்டின் உள்ளிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறாள்.
தலைவி, தனக்கு விருப்பமான, களவில் சந்தித்து வந்த மாப்பிள்ளையாகிய தலைவனுக்குத் தன்னை மணம் முடித்துக் கொடுக்கத் தன்வீட்டார் மறுத்து விடுவார்களோ என்று ஐயப்பட்டு, வருத்திக்கொண்டிருக்கிறாள். அந்த வருத்தத்தைப் போக்கி, தலைவியை மகிழ்விக்கும் நோக்கில், அவளிடம் சிலவற்றை சொல்கிறாள் தோழி.
Advertisement
Advertisement
தோழியே! (தலைவியே!) உனக்கு வாழ்த்துகள்! நான் சொல்வதைக் கேள்! நம் வீட்டின் முன் பகுதியில் தலைவனின் வீட்டார் குழுமியுள்ளனர்.
அவர்களுள், ஊன்றுகோலாகிய கைத்தடியை உடையவரும், நரைத்த தலையில் துணியால் தலைப்பாகையைக் கட்டியவரும் ஆகிய பெரியவர்களும் இருக்கின்றனர், அவர்கள் எல்லோரும், நமது உறவினர்கள் சொல்வனவற்றுக்கெல்லாம், நல்லது! நல்லது!' என்று கூறி, மகிழ்கின்றனர், அதுபோலவே, நம் வீட்டாகும், மாப்பிள்ளை வீட்டாராகிய உங்களுடைய வருகையால், இந்த நாள் பெருமை பெற்றுவிட்டது' என்கின்றனர்.
இவ்வாறு மகிழ்ந்து முகமன் கூறுதலும், வரைவு உடன்பட்டமைக்கு அறிகுறிகளாகும் என்கிறாள் அத்தோழி. தோழி கூற்றாக வரும், வெள்ளி வீதியார்' என்ற புலவர் பாடிய, குறுந்தொகைப் பாடல் இதுதான்!
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர்
கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்தலைச் சிதவலர்
நன்று நன்று என்னும் மாக்களோடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது
அவையே
( குறுந்.146)
இப்பாடலின் வழியாக, புணர்ந்தோராகிய தலைவன் தலைவியை, இற்செறித்தல்' முதலியவற்றால் முன்னர்ப் பிரித்தோராகிய நம் உறவினர், இன்று வரைவு உடன்பட்டு, பிரிந்தோரைப் புணர்ப்போராய் உள்ளனர் என்று நயம்பட உரைக்கிறாள் தோழி.
நரைத்த தலைமுடியில், துணியால் தலைப்பாகையைக் கட்டிக் கொண்டோருள்ளும், கையில் ஊன்றுகோலுடன் விளங்குவோரும் ஆகிய, வயதாலும் அறிவாலும் உயர்ந்த, மூத்த குடிமக்களைத் தம்மில் முன்னிறுத்தி, அவர்களை உடன் அழைத்துக் கொண்டு, பெண்கேட்டுச் செல்லும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தது என்பதை, இதன்வழி அறிந்து மகிழ முடிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.