முகப்பு
வெள்ளிமணி

குதிரை முகத்தோனுக்கு குமபாபிஷேகம்!

இறைவனின் திரு அவதாரங்கள் அனைத்துமே வேத நெறியை நிலை நிறுத்தி, அதன் மூலம் ஜீவ கோடிகளைக் காப்பதையே லட்சியமாக உடையவை. அந்த வகையில், ஞானத்தைப் புகட்டும் வேத நூல்களுக்கு ஒரு சந்தர்பத்தில் அபாயம் ஏற்பட்டபோது

Updated On : 20 செப்டம்பர் 2012, 9:07 am IST
பகிர்:

இறைவனின் திரு அவதாரங்கள் அனைத்துமே வேத நெறியை நிலை நிறுத்தி, அதன் மூலம் ஜீவ கோடிகளைக் காப்பதையே லட்சியமாக உடையவை. அந்த வகையில், ஞானத்தைப் புகட்டும் வேத நூல்களுக்கு ஒரு சந்தர்பத்தில் அபாயம் ஏற்பட்டபோது, அதை மீட்பதற்காக உண்டானதே எம்பெருமானின் ஹயக்ரீவ அவதாரம். குதிரை முகம் கொண்ட மது, கைடபன் என்னும் அரக்கர்களால் வேதங்கள் அபகரிக்கப்பட்டபோது அவர்களைப் போலவே குதிரை முகம் கொண்டு, அவர்களை மாய்த்து, வேதங்களை மீட்டு படைப்புக் கடவுளாகிய பிரம்ம தேவனிடம் ஒப்படைத்தார் ஸ்ரீஹயக்ரீவர்.

சுவாமி தேசிகனும், மத்வ சம்பிரதாயத்தில் ஒரு கிளையான சோதே மடத்து சுவாமிகளான ஸ்ரீ வாதிராஜ சுவாமிகளும் ஒப்பற்ற ஹயக்ரீவ பக்தர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள், திருமாலை ஹயக்ரீவ வடிவத்திலேயே தரிசனம் செய்துள்ள பேற்றினைப் பெற்றவர்கள். வாதிராஜ யதிகள், தன்னுடைய "ஹயக்ரீவ ஸம்பதா' என்னும் ஸ்தோத்திரத்தில், "எவன் ஒருவன் ஹயக்ரீவ என்னும் மந்திரச் சொல்லை மூன்று முறை உச்சரிக்கின்றானோ அவனுக்கு கங்கா பிரவாகம்போல் வாக்கு சக்தியானது ஏற்படும்' என்று கூறியுள்ளார். லட்சுமி ஹயவதனப் பெருமாளை துதிப்பவர்களுக்கு, "குதிரை வேகம்' என்றும் சொல்லப்படும் ஒரு சக்தி ஞான விஷயத்தில் ஏற்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஸ்ரீலட்சுமி ஹயவதனப் பெருமாளுக்கு சில திருக்கோயில்களில் தனி சந்நிதி உண்டு; பிரத்யேக ஆலயங்களும் ஆங்காங்கே உண்டு. தற்போது சென்னையில், பல்லாவரம் அருகில் உள்ள பொழிச்சலூரில், மூவர் நகரில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதியதாக ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவப் பெருமாளுக்கு தனி சந்நிதி கட்டப்பட்டுள்ளது. ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்க்ஷணம் மே 15ம் தேதி காலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. பூர்வாங்க, ஹோம பூஜைகள் மே 13-ம் தேதியன்று (இன்று) ஆரம்பமாகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ லஷ்மி ஸமேத ஹயக்ரீவர் ஆலய திருப்பணிக் குழுவினர் சிறப்பாகச் செய்துள்ளனர். திருமால் அடியார்கள் அவசியம் தங்களது பிள்ளைச் செல்வங்களை அழைத்துச் சென்று தரிசித்துப் பயன் பெற வேண்டிய வைபவம் இது.

Advertisement

Advertisement

மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9380762791 / 9444405149.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.