இலங்கையில் இனி ஹலால் சான்றிதழ் இல்லை:முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு
இலங்கையில் பெரும்பான்மையினராக உள்ள புத்த மதத்தினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, மாமிசம் உள்ளிட்ட
இலங்கையில் பெரும்பான்மையினராக உள்ள புத்த மதத்தினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, மாமிசம் உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு இனி ஹலால் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது என இஸ்லாம் அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து அனைத்து இலங்கை ஜமியத்துல் உலமா (ஏ.சி.ஜே.யு.) அமைப்பின் ரிஸ்வி முஃப்தி கூறுகையில், ""சூப்பர் மார்க்கெட்களில் இனி ஹலால் சான்றிட்ட பொருள்கள் இருக்காது. முஸ்லிம்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதும் இந்த விஷயத்தை நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தியாகம் செய்கிறோம். எனினும், இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் வழங்கப்படும்'' என்றார்.
முன்னதாக உணவுப் பொருள்களுக்கு வழங்கப்படும் ஹலால் சான்றிதழுக்கு எதிராக, போது பால சேனை (பி.எஸ்.எஸ்.) என்ற புத்த மத அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களையும் அத்தகைய பொருள்களை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டினர்.
Advertisement
ஒரே வகையான பொருளை ஹலால் முத்திரையுடனும், ஹலால் முத்திரை இல்லாமலும் விற்பது நடைமுறைக்கு ஒத்து வராது என இலங்கை வர்த்தக சபை கூறியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக இரு பிரிவினரிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து ஆராய அமைச்சக அளவில் சிறப்புக் குழுவை அதிபர் ராஜபட்ச நியமித்துள்ளார்.