முகப்பு
உலகம்

முஷாரபை கைது செய்ய சர்வதேச போலீஸ் மறுப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை வழக்கு தொடர்பாக முன்னாள் அதிபர் பர்வேஸ்

Updated On : 22 மார்ச், 2013 at 1:10 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை வழக்கு தொடர்பாக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை கைதுசெய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) நிராகரித்து விட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கடந்த 2008-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். அப்போது முஷாரப் அதிபராக பதவியில் இருந்தார்.

பின்னர், பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், 2009-ஆம் ஆண்டு அவராகவே நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், பேநசீர் புட்டோ படுகொலை வழக்கு விசாரணைக்கு முஷாரப் ஒத்துழைப்பு அளிக்காததால், அவருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.

Advertisement

அவர் வெளிநாட்டில் வசித்து வருவதால், அவரை கைதுசெய்ய சர்வதேச போலீஸின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியது. முஷாரபை கைதுசெய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியது.

ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதால், முஷாரபை கைது செய்து ஒப்படைக்க முடியாது என்று சர்வதேச போலீஸ் கைவிரித்து விட்டது. சர்வதேச போலீஸின் இந்த அறிவிப்பு பாகிஸ்தான் அரசுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

முஷாரப் விவகாரத்தில், பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை சர்வதேச போலீஸ் நிராகரிப்பது இது இரண்டாவது முறையாகும்.

முஷாரபை கைதுசெய்யக் கோரி, கடந்தாண்டு பாகிஸ்தான் அரசு சர்வதேச போலீஸôரிடம் சில ஆவணங்களை வழங்கியது. ஆனால், அந்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை எனக் கூறி, பாகிஸ்தான் கோரிக்கையை சர்வதேச போலீஸ் நிராகரித்து விட்டது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முஷாரப் கட்சி போட்டியிடுவதை தடுத்துவிட நடந்த முயற்சி, இதன்மூலம் தோல்வி அடைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்தபடியே, "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள முஷாரப், கட்சி நிர்வாகிகளை நியமித்து பாகிஸ்தானில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை கண்காணிக்க இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க வருகிற 24-ஆம் தேதி பாகிஸ்தான் திரும்புவேன் என்று முஷாரப் அறிவித்துள்ளார்.

சர்வதேச போலீஸ் கைவிரித்து விட்டதாலும், பாகிஸ்தானில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாலும், அரசியல்வாதியான முஷாரபை இடைக்கால அரசு கைதுசெய்ய முடியாது என்பதாலும், முஷாரப் நாடு திரும்புவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.