சரப்ஜித் சிங் தாக்கப்பட்ட விவகாரம்: சிறை அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை
பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு சிறை அதிகாரியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு சிறை அதிகாரியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாகிஸ்தானில் உள்ள கோட் லக்பத் சிறையில் இந்தியர் சரப்ஜித் சிங், சக கைதிகளால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கப்பட்டார்.
கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங் தற்போது ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார்.
Advertisement
இது தொடர்பாக நான்கு சிறை அதிகாரிகள் மற்றும் ஒரு துணை கண்காணிப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக, சம்பவம் நடந்த அடுத்த நாள் உயர் அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
ஆனால் அது வெறும் கண்துடைப்பு என இப்போது தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாக்குதல் சம்பவத்தைத் தடுக்காதது ஏன் என விளக்கம் அளிக்குமாறு ஏழு சிறை அதிகாரிகள், ஒரு கூடுதல் கண்காணிப்பாளர், ஒரு துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கோட் லக்பத் சிறைச்சாலை அமைந்துள்ள பஞ்சாப் மாகாணத்தின் இடைக்கால முதல்வர் நஜாம் சேதி, இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தோ அல்லது தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு எந்தத் தகவலையும் வெளியிடக் கூடாது என கோட் லக்பத் சிறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சரப்ஜித் சிங் சேர்க்கப்பட்டுள்ள ஜின்னா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.