முகப்பு
உலகம்

நரேந்திர மோடி மீதான விசா தடையை நீட்டிக்க அமெரிக்கக் குழு கோரிக்கை

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையைத் தொடர வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் அமைத்த குழு, அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.

Updated On : 2 மே 2013, 6:17 am IST
பகிர்:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையைத் தொடர வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் அமைத்த குழு, அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரங்களைத் தொடர்ந்து, அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று சில தரப்பினர் அந்நாட்டை வலியுறுத்திய போதிலும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் அமைத்துள்ள சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் என்ற குழு வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரத்தில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் மோடியைத் தொடர்புபடுத்துவதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் உள்ளன.

எனவே அவருக்கு விசா வழங்குவது பொருத்தமாக இருக்காது. அவருக்கு விசா வழங்குவதற்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்க வேண்டும்.

குஜராத் முதல்வர் மோடி, அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்பார் என்ற அச்சம் காரணமாக, நாங்கள் 2012 நவம்பர் மாதத்தில் அப்போது வெளியுறுவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு ஒரு கடிதத்தை எழுதினோம்.

இதேபோல், மதச் சுதந்திர மீறல் அடிப்படையில் வெளிநாட்டைச் சேர்ந்த எந்தெந்த நபர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்று வெளியுறவு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சகங்கள் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.