கைதிகளின் விடுதலைக்கு உதவி வரும் இந்தியர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கைதிகளின் விடுதலைக்கு இந்திய வர்த்தகர் ஒருவர் உதவி வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கைதிகளின் விடுதலைக்கு இந்திய வர்த்தகர் ஒருவர் உதவி வருகிறார்.
இதுவரை 3,700 கைதிகள் விடுதலைக்கு அவர் உதவி புரிந்துள்ளார். அவரது பெயர் ஃபிரோஸ் ஜி.மெர்ச்சன்ட். மும்பையைச் சேர்ந்த இவர் 1989-ல் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றார். அங்கு தங்க ஆபரணக் கடை வைத்திருக்கும் அவர், சிறைக் கைதிகளின் நிலைமையை அறிந்து அவர்களின் விடுதலைக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
அங்கு வேலைக்குச் சென்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், அங்குள்ளவர்களிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமை; கார் லோன் நிலுவை, வீட்டு வாடகை பாக்கி, கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாமை போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
அவர்களுக்கான அந்த தொகையை ஃபிரோஸ் செலுத்தி அவர்களை சிறைகளில் இருந்து விடுவித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 3,700 பேரை விடுவித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 500 பேருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வகையில் இதுவரை ரூ.6 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 1000 கைதிகளின் கடன்களை தீர்த்து, அவர்களை விடுவித்து, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க தான் திட்டம் வைத்திருப்பதாக கூறுகிறார் ஃபிரோஸ்.
மேலும் அவர் கூறுகையில், கடன் போன்ற பிரச்னைகளினால் சிறைக்குச் சென்றவர்களுக்கு மட்டுமே நான் உதவி செய்கிறேன். கொலை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காக சிறைக்குச் சென்றவர்களை, வெளியே கொண்டுவர இதுவரை முயன்றது கிடையாது. அப்படிப்பட்டவர்களுக்கு ஒருபோதும் உதவிசெய்ய மாட்டேன் என்றார் ஃபிரோஸ்.