ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரில், ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரில், ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரிட்டனின் வசம் இருந்த ஹாங்காங் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் 16ஆம் ஆண்டு தினத்தையொட்டி, ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பூங்காவில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்களில் பலரும் முந்தைய பிரிட்டன் ஆட்சிக்காலத்து தேசியக்கொடியை ஏந்தியிருந்தனர்.
ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்டுவருமாறும் ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா அளவுக்கு அதிகமாகத் தலையிடுவதை நிறுத்துமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
Advertisement
Advertisement
"ரம்பியா' புயல் காரணமாக பலத்த மழை மற்றும் சூறைக்காற்று வீசியபோதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. "இப்போதே ஜனநாயகம்', "சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒழிக' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
மாத வருமானம் பெறுவோர் இடையிலான இடைவெளி அதிகரிப்பது, வீடு மற்றும் மனைகளின் விலைகள் அதிகரித்துள்ளது போன்றவற்றால் ஹாங்காங் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குறிப்பாக, நகரின் தலைமை நிர்வாகி லியூங் சன்-யிங் மீது அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த சிவில் மனித உரிமை முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஜாக்கி ஹங் கூறுகையில், ""உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது மற்றும் நகரின் தலைமை நிர்வாகி லியூங் சன்-யிங் பதவி விலகக் கோருவது ஆகியவைதான் இந்தப் பேரணியின் நோக்கம்'' என்றார்.
ஹாங்காங் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் ஹாங்காங்கில் உள்ள 33 சதவீதம் பேர் மட்டுமே தாங்கள் சீன தேசத்துப் பிரஜைகள் என்று அழைக்கப்படுவதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.