முகப்பு
உலகம்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் விஷ வாயுவை பயன்படுத்தியது அம்பலம்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் சரீன் விஷ வாயுவை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. இதற்கான ஆதாரங்களை ரஷியா அளித்துள்ளது.

Updated On : 12 ஜூலை, 2013 at 12:54 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் சரீன் விஷ வாயுவை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. இதற்கான ஆதாரங்களை ரஷியா அளித்துள்ளது.

சிரியாவில் நடைபெற்ற கிளர்ச்சியில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 19-ம் தேதி சிரியாவின் அலெப்போ நகரில் கான் அல்-அஸல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 16 ராணுவ வீரர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த இடத்திலிருந்து திரட்டப்பட்ட சோதனை மாதிரிகளில் இருந்து சரீன் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது புலனாகியுள்ளது. இத்தகவலை ரஷியாவின் இடார் டாஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷிய பிரதிநிதி விதாலி சர்கின் தெரிவித்துள்ளார்.

Advertisement

சரீன் ரசாயன வாயுவைக் கொண்ட குண்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ரசாயனத்தை நிலைநிறுத்தும் தன்மை எதுவும் அந்த குண்டில் இல்லை. மேலும் அதை வெகுகாலம் பத்திரப்படுத்தி வைக்கவும் முடியாது. பொதுவாக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் குண்டுகளுக்கான தரம் இதில் சிறிதும் இல்லை என்று சர்கின் தெரிவித்தார்.

""பஷார்-3'' எனும் ஏவுகணை மூலம் சரீன் வாயு கொண்ட குண்டு செலுத்தப்பட்டுள்ளது. இது இலக்கு நிர்ணயிக்க முடியாத ஏவுகணை வகையைச் சேர்ந்ததாகும். இத்தகைய குண்டுகளை கிளர்ச்சியாளர்கள்தான் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏவுகணை மூலம் ரசாயன வாயு தாக்குதலை ராணுவம்தான் நடத்தியது என இதுவரை நம்பப்பட்ட செய்தி தவறானது என நிரூபணமாகியுள்ளது.

இத்தகவல்கள் அடங்கிய 80 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலரிடம் செவ்வாய்க்கிழமை நியூயார்க்கில் ரஷிய பிரதிநிதி அளித்தார்.

சிரியாவில் உள்ள அரசு எல்லை மீறி ரசாயன குண்டுகளைப் பிரயோகிக்கிறது. இது கண்டனத்துக்குரியது என்று கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருந்தார். இதையடுத்தே கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவியை அமெரிக்கா தொடர்ந்தது. ஆனால் சரீன் விஷ வாயுவை கிளர்ச்சியாளர்கள்தான் பயன்படுத்தியுள்ளது இப்போது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.