முகப்பு
உலகம்

செவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் ரோபோ விண்கலம் புகைப்படம் அனுப்பியது!

நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட், ஏழு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக 

Updated On : 27 நவம்பர் 2018, 12:28 pm IST
பகிர்:


வாஷிங்டன்: நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட், ஏழு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே தான் எடுத்த புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்புயுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழுவதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு க்ரியூயாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து செவ்வாயின் உள்பகுதிகளை ஆழமாக ஆய்வு செய்வதற்காக முதல் ரோபோ விண்கலம் இன்சைட், கடந்த மே மாதம் 5 ஆம் தேதி கலிபோர்னியாவிலுள்ள வாண்டென்பெர்ஜ் விமானப்படைத் தளத்திலிருந்து விண்ணில் செலுத்திய இன்சைட் விண்கலம் ஏழு மாதங்களுக்கு பிறகு சுமார் 48 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு பின்னர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ரோபோ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிக்கு அருகே உள்ள அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே தான் எடுத்த புகைப்படங்களை "எனது புதிய வீட்டில் முதல் தோற்றம்" என்று பொருள்படும் வகையில் நாசாவிற்கு அனுப்புயுள்ளது. 

Advertisement

Advertisement

இதை கொண்டாடும் விதமாக கலிஃபோர்னியாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் உள்ள நாசாவின் கட்டுப்பாட்டு மையக்குழுவினர் கரகோஷம் எழுப்பியும், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டும், கைகளை குலுக்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் ஆர்வ மிகுதியால் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தனர். 

இது குறித்து நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி ஜிம் ப்ரைடென்ஸ்டீன், மனித வரலாற்றில் எட்டாவது முறையாக இன்று செவ்வாய் கிரகத்தில் இன்சைட் வெற்றிகரமாக நாங்கள் தரையிறக்கியுள்ளோம். இந்த சாதனை அமெரிக்காவிற்கும் நமது சர்வதேச பங்காளர்களின் புத்திசாலித்தனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் நாசாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என கூறினார். 

செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், தரையில் துளையிட்டு உட்புற வெப்பப் பரிமாற்றங்கள்,  போன்றவற்றை முதற்கட்டமாக ஆய்வு செய்யும் இன்சைட் விண்கலம், தொடர்ந்து அந்த கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் திரவங்கள் ஏதும் உள்ளதா அல்லது திடநிலையிலே உள்ளதா என தெரிய வரும் என நாசா தெரிவித்துள்ளது.

இன்சைட் விண்கலம் செவ்வாய்யில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ள 8-வது விண்கலமாகும். இரண்டு ஆண்டு ஆயுட்காலம் கொண்ட இன்சைட் விண்கல திட்டத்திற்காக 850 மில்லியன் டாலர் தொகையை நாசா செலவு செய்துள்ளது. இந்த ஆய்வுகளை கொண்டு அடுத்து ஓராண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.