நைஜீரியா: தேர்தல் வன்முறையில் 39 பேர் பலி
நைஜீரியாவில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகளில் 39 பேர் பலியானதாக தேர்தல் கண்காணிப்பு குழு திங்கள்கிழமை தெரிவித்தது.
நைஜீரியாவில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகளில் 39 பேர் பலியானதாக தேர்தல் கண்காணிப்பு குழு திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து தேர்தல் கண்காணிப்பு குழுவின் செயல் இயக்குநர் கிளமெண்ட் வாங்கூ தெரிவித்துள்ளதாவது:
நைஜீரியாவில் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை பிப்ரவரி 16-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பணியாளர் பற்றாக்குறையை காரணம் காட்டி தேர்தல் ஒருவார காலத்துக்கு ஒத்திப்போடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் 73 வேட்பாளர்கள் இருந்தாலும், தற்போதைய அதிபர் முகமது புஹாரிக்கும், முன்னாள் துணை அதிபர் அடிகு அபுபக்கருக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதுவரையில், தேர்தல் தொடர்பான வன்முறைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 என கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசியல் வன்முறைகள் அதிகமாக நிகழும் தெற்கு மாகாணங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். பயில்ஸா மாகாணத்தில் 4 பேரும், டெல்டா மாகாணத்தில் இருவரும் பலியாகினர். இவை தவிர நாடு முழுக்க நிகழ்ந்த தேர்தல் தகராறுகளில் 17 பேர் பலியாகினர்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகளே பெரும்பாலான வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமாக அமைந்தது. ஆறு மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல் வன்முறையாளர்களால் தடைபட்டது. வாக்காளர்கள் விரட்டப்பட்டு, வாக்குப் பெட்டிகளும் தீக்கிரையாக்கப்பட்டன என்றார் அவர்.